தேர்தல் ஆணைய நடவடிக்கை குறித்து குர்ஷித் மெளனம்
லக்னெள: உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து மீறிவரும் குர்ஷித் விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க் வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருப்பது குறித்து கருத்து தெரிவிக்க குர்ஷித் மறுத்துவிட்டார்.
லக்னெளவில் சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, "நான் எதுவும் சொல்வதற்கில்லை.. நான் சொல்லவேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்கிறேன்" என்றார்.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் அபித் உசைன் கருத்து தெரிவிக்கையில், தேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் தொடர்புடைய விவகாரம் என்பதால் அமைச்சர் சல்மான் குர்ஷித் இப்போது கருத்து எதனையும் தெரிவிக்கமாட்டார் என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தற்போது அமைச்சர் சல்மான் குர்ஷித் எந்தக் கருத்தையும் தெரிவிக்கமாட்டார் என்றும் அபித் உசைன் தெரிவித்துள்ளார்.
விவகாரம் என்ன?
உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது சிறுபான்மையினர் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் விவகாரங்களை பேசுவது விதிமீறல் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
தடையே இருந்தாலும் தாம் சிறுபான்மை உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன்..இதற்காக தேர்தல் ஆணையம் தூக்கில் போடுவார்கள் எனில் போடட்டும் என்றும் சல்மான் குர்ஷித் பேசியது சர்ச்சையை அதிகரித்தது.
சட்ட அமைச்சராக இருக்கும் சல்மான் குர்ஷித்தின் பேச்சு குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவர் பிரதீபாவுக்கு தேர்தல் ஆணையம் நேற்று கடிதம் எழுதியது.
சல்மான் குர்ஷித் விவகாரத்தில் நாளை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கையை அறிவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.