லண்டனில் இந்திய மாணவர் மீது 'கொலவெறி' தாக்குதல்

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, இங்கிலாந்திலும் இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
கடந்த 2 மாதங்களில் இங்கிலாந்தில் அடுத்தடுத்து 3 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்..
இந்நிலையில், மேலும் ஓர் இந்திய மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் சுதாகர் ரெட்டி.
இவருடைய மகன் பிரவீண் ரெட்டி (வயது 26). இவர் இங்கிலாந்து மாநிலம் லண்டன் புறநகரான நியூஹாம் நகரில் ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில், பிரவீண் ரெட்டியின் வீட்டில் அவருடைய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர்கள் சிலர், பிரவீண் ரெட்டியை சரமாரியாக கத்தியால் குத்தினர். பிறகு அவரை சன்னல் வழியாக வெளியே வீசி எறிந்தனர்.
கடுமையான கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த பிரவீண் ரெட்டியை ஸ்காட்லாந்துயார்டு போலீசார் நியூஹாம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 11 பேரை ஸ்காட்லாந்துயார்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் 7 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
தந்தை கருத்து
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரவீணின் தந்தை சுதாகர் ரெட்டி, உறவினர் திருமணத்துக்காக, வருகிற 17-ந் தேதி பிரவீண் ரெட்டி ஹைதராபாத்துக்கு வர இருந்ததாகவும், இதுதொடர்பாக தம்முடனும், மனைவியுடனும் பிரவீண் ரெட்டி தொலைபேசியில் பேசியதாகவும் கூறினார்.
மேலும் தாமும், தமது குடும்பத்தினரும் இங்கிலாந்து செல்ல விரும்புவதாகவும், தங்களுக்கு விரைவில் விசா கிடைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதர் பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் பிரசாத்திடம் விளக்கம் கேட்டு, பிரவீண் ரெட்டிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அவர் உத்தரவிட்டார்.
இனவெறித்தாக்குதல் அல்ல
இச்சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர், இனவெறி அடிப்படையில் பிரவீண் ரெட்டி தாக்கப்பட்டிருக்கமாட்டார் என்றும் இது இனவெறித் தாக்குதல் அல்ல என்றும் கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications