அம்மாவை மறந்த நன்றி கெட்டவர்களுக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்து விட்டது-சிவபதி
ஸ்ரீரங்கத்தில் நேற்று முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிவபதி பேசுகையில், விஜயகாந்த்தை கடுமையாக சாடிப் பேசினார்.
அவர் பேசுகையில், சிலர் தனி மரமாக சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஏற்றம் கொடுத்து, தோப்பாக மாற்றிய பெருமை நமது அம்மாவையே சாரும். ஆனால் இப்போது அவர்கள் நன்றி மறந்தவர்களாக மாறியுள்ளனர்.
இப்படிப்பட்ட நன்றி கெட்டவர்களுக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்து விட்டது. அவர்களது கடைசி அத்தியாயத்தை எழுதப் போகிறோம். நம்முடைய அம்மா ஒரு ஒன் மேன் ஆர்மி ஆவார்.
தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் அந்தப் புயலை விட அதிவேகமாக செயல்பட்டு நிவாரணப் பணிகளை மக்களுக்கு வழங்கியவர் நம் அம்மா.
இங்குள்ள அகிலாண்டேஸ்வரி கோவில் முன்பு நின்றபடி சத்தியம் செய்கிறேன், நமக்கெல்லாம் அகிலாண்டேஸ்வரி தாய் நமது அம்மாதான். என்னை அமைச்சராக்கியதும், இன்றுள்ள நிலைக்கு என்னைக் கொண்டு வந்ததும் நம் அம்மாதான் என்று உணர்ச்சிவசப்பட்டு, பெரும் உணர்ச்சிப் பிழம்பாக மாறிப் பேசினார் சிவபதி.