ராவணன் மீது ரூ. 2 கோடி மோசடி செய்ததாக புகார்-மறுபடியும் கைதாகிறார்
சென்னை: ஏற்கனவே 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவாகியுள்ளது. அதிலும் அவர் கைதாகவுள்ளார்.
வேலூரைச் சேர்ந்த தொழில் அதிபர் புவனேசன் என்பவர் மீண்டும், ராவணன் மீது புதிய புகார் மனு ஒன்றை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ளார்.
அதில்,
எனக்கு மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக ராவணன், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் உதவியாளர் ஆறுமுகம், கார் டிரைவர் ராஜசேகரன் ஆகியோர் ரூ.2 கோடி வாங்கினார்கள். ரூ.5 கோடி கேட்டார்கள். முதல் தவணையாக ஆறுமுகம் மூலம் நான் அந்த தொகையை கொடுத்தேன். ஆனால் மணல் குவாரி உரிமம் பெற்றுத்தரவில்லை.
இதனால் நான் கொடுத்த ரூ.2 கோடி பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அந்த பணத்தை திருப்பித் தராமல் என்னை மிரட்டினார்கள். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்ட்டுள்ளது.
இதையடுத்து தற்போது போலீஸார் ராவணன், ஆறுமுகம், ராஜசேகரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் ஆறுமுகமும், ராஜசேகரனும் வீடு புகுந்து ஒரு பெண்ணை மிரட்டிய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது அவர்கள் மீது புதிய புகாரும் பாய்ந்துள்ளது.
விரைவில் இந்தப் புதிய வழக்கில் ராவணன் உள்பட 3 பேரும் கைது செய்யப்படவுள்ளனர்.