கூடங்குளம்-கலாம் ஆலோசனையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை
மதுரை: கூடங்குளம் விவகாரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஆலோசனையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஜப்பான் ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட பாதிப்பையடுத்து அணுமின் நிலையம் குறித்து மக்கள் அச்சப்படுகின்றனர். மக்களின் அச்சத்தை போக்குவது அரசின் கடமை. ஆனால் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது வி.வி.ஆர். டைப் அணு உலையாகும். ஐரோப்பா போன்ற நாடுகளில் இது போன்ற அணுமின் நிலையங்கள் நல்ல முறையில் இயங்கி வருகிறது.
மத்திய நிபுணர்குழு கூடங்குளத்தை ஆய்வு செய்து அது பாதுகாப்பானது என்றும், அதனால் அச்சப்படத் தேவையில்லை என்றும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தற்போது தமிழக அரசும் 4 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்துவிட்டு ஆபத்தில்லை என்று தெரிவித்ததுடன், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ. 200 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.