மின்தடையால் மக்கள் கொதிப்பு-மின்துறை அதிகாரிகள், உற்பத்தியாளர்களுடன் ஜெ. இன்று ஆலோசனை

இந்த கூட்டத்தின்போது தொழிற்சாலைகளுக்கு சுழற்சி முறையில் வாராந்திர மின் விடுமுறை அளிப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், மின்துறை செயலாளர், தமிழக மின்வாரிய தலைவர், தொழில்துறை செயலாளர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
முதலில் தொழிற்சாலை அதிபர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் வட சென்னை, மேட்டூர், வள்ளூர் மின் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடவும் தமிழக அரசு உத்தேசித்துள்ளது. மேலும், நெய்வேலி இரண்டாம் நிலை மின் நிலைய விரிவாக்க திட்டத்தை தாமதப்படுத்தாமல் விரைந்து முடித்து, கூடுதல் மின்சாரம் தர, மத்திய அரசுக்கும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கும் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
அதேபோல அபரிமிதமாக மின் உற்பத்தி செய்யும் குஜராத்திலிருந்தும், சட்டிஸ்கரிலிருந்தும் குறைந்த விலைக்கு மின்சாரத்தை வாங்கி தமிழகத்தில் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
எதைச் செய்தாலும் விரைந்து செய்ய வேண்டும் என்று மக்களும், தொழில்துறையினரும் அரசை எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications