சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
கோவை: சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை என்ற விரக்தியில் 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பீளமேடு சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (40). திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் எலட்ரீசியனாக வேலை பார்த்து வருகின்றார்.
இவருக்கு சாந்தி(32) என்ற மனைவியும், பிரியதர்ஷினி(8), ஜீவதர்ஷினி(3) என்ற 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கோவை வரும் செல்வராஜ் குடும்பத்துடன் தங்கிவிட்டு திங்கட்கிழமை காலையில் திருப்பூருக்கு புறப்பட்டு செல்வார்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணி வரை செல்வராஜின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கப்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, சாந்தியும் அவரது 2 மகள்களும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் புதிய வீடு வாங்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் சாந்தி இந்த கோர முடிவை எடுத்தது தெரிய வந்தது.
ரூ.2,000 வாடகை வீட்டில் வசித்து வந்த சாந்தி, புதிய வீடு வாங்க விரும்பினார். இதற்காக வெள்ளலூரில் ரூ.91.2 லட்சம் மதிப்பில் புதிய வீடு வாங்க செல்வராஜும், சாந்தியும் முடிவு செய்திருந்தனர். ஆனால் பின்னர் செல்வராஜ் வீடு வாங்க மறுத்துவிட்டார்.
இதனால் வீடு வாங்க முடியவில்லை என்ற விரக்தியில் இருந்த சாந்தி, 2 மகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தார். அதன்பிறகு தானும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications