750 ஆண்டுகள் பழமையான வாய்க்காலில் உடைப்பு: 100 ஏக்கர் நெற்பயிர் வெள்ளத்தில் சேதம்
ஈரோடு: ஈரோட்டில் சுமார் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலிங்கராயன் வாய்க்காலில் நேற்று அதிகாலை திடீர் என்று உடைப்பு ஏற்பட்டது. இதில் பாசனப் பகுதியில் நடவு செய்யப்பட்டிருந்த 100 ஏக்கர் நெற்பயிர் மற்றும் செங்கல் சூளைகள் வெள்ளத்தில் சேதம் அடைந்தன.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காலிங்கராயன் என்பவர் பவானி முதல் கொடுமுடி வரையிலான விவசாயிகள் பயன் பெறும் வகையில் வாய்க்கால் ஒன்றை அமைத்தார். இதன் மூலம் கடந்த 750 ஆண்டுகளாக காலிங்கராயன்பாளையம் முதல் ஆவுடையார்பாறை வரை சுமார் 15,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
காலிங்காராயன் கால்வாய் மூலம் முதல் போகம் முடிந்து 2ம் போகத்துக்கான நடவு பணிகள் கடந்த மாதம் முதல் நடந்து வந்தது. இதற்காக 584 கனஅடி கொள்ளளவு கொண்ட வாய்க்காலில் வினாடிக்கு 578 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் வாய்க்காலின் 2 கரைகளையும் தொட்ட வண்ணம் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் ஓடி வந்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்காலில் திடீர் என்று உடைப்பு ஏற்பட்டது. இதில் சுமார் 40 அடி நீளத்துக்கு வாய்க்காலின் கரை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் வாய்க்காலில் ஓடிய தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்து எங்கும் தண்ணீர் மயமாக காட்சி அளித்தது. இதில் நடவு செய்து 15 முதல் 45 நாட்கள் வரையிலான சுமார் 100 ஏக்கரில் இருந்த நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
மேலும் அப்பகுதியில் இருந்த செங்கல் சூளைகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் சமீபத்தில் சூளையில் சுடுவதற்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 லட்சம் செங்கல்கள் சேதம் அடைந்தன.
வாய்க்கால் உடைப்பு குறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரகலாதன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக காலிங்கராயன்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் மதகுகளை அடைத்து, தண்ணீர் வீணாவதை தடுத்தனர்.












Click it and Unblock the Notifications