ஈரோடு அருகே ரகசியமாக இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலை - பெண் உட்பட 6 பேர் கைது
ஈரோடு: ஈரோட்டில் ரகசியமாக இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலை ஒன்றை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். இங்கு போலி மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த அஞ்சுராம்பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரித்து வந்த போலீசார், நேற்று காலை 7 மணி அளவில் குறிப்பிட்ட தென்னந்தோப்பை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர்.
அப்போது தென்னந்தோப்பில் இருந்த வீட்டில் முருங்கத்தொழுவு கிராமத்தை சேர்ந்த மனோகரன்(45), ராஜேந்திரன்(30), லோகநாதன்(30), தனபால்(27). திருச்செங்கோட்டை சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி பாப்பாத்தி(40), அஞ்சுராம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (45) உள்ளிட்ட 6 பேர், போலி மதுபானம் தயாரித்தது தெரிய வந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், அங்கிருந்த 121 அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த மதுபானம் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதில் போலி மதுபானம் நிரப்பப்பட்ட 1,008 குவார்ட்டர் பாட்டில்கள், 120 ஆப் பாட்டில்கள் இருந்தன. இது தவிர 7 கேன்களில் 245 லிட்டர் எரி சாராயமும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
மனோகரன் தலைமையில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதமாக போலி மதுபானம் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட எரிசாராயத்தில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கலந்து, கலர் பவுடர்கள் கலந்து போலி மதுபானம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து பெறப்பட்ட காலி மதுபான பாட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பி உள்ளனர்.
மதுபான பாட்டிகளுக்கு தேவையான லேபிள்கள் புதுச்சேரியில் இருந்து பெறப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் மதுபான பாட்டிகளுக்கு மூடி பொருத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பி உள்ளனர்.
ஆத்தூர், ஈரோடு பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில், மேற்கண்ட போலி மதுபானம் பாட்டிகளை விற்பனை செய்து வந்துள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் வரும் வாடிக்கையாளர்களுக்கு போலி மதுபான பாட்டிகளை விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications