மக்கள் விலை உயர்வால் அவதிப்படும் நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்-ஸ்டாலின்
சென்னை: தமிழக மக்கள் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் வெட்டு என்று பல பிரச்சினைகளில் மூழ்கி தவித்து வரும் நிலையில் எனது பிறந்த நாளை கொண்டாடத் தேவையில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சட்டம்-ஒழுங்கு சீரழிந்து, மக்கள் தாங்கொணாத்துயரத்தில் இருப்பதையும் - நாள்தோறும் இன்னல்களை அனுபவித்து வருவதையும் காணுகின்றோம்.
பெரிய அளவிலான மின்தட்டுப்பாடு - பால்விலை ஏற்றம் - பேருந்து கட்டண உயர்வு - பலவகையான வரிகள் உயர்வு என பல்வேறு துன்பங்களால் தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த விதமான முன்னேற்ற திட்டங்களும் இல்லை. ஆனால், தலைவர் கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த அத்தனை நலத்திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, தி.மு.க. முன்னோடிகள் மற்றும் கழக தோழர்கள்மீது பொய் வழக்குகள் போட்டு, சிறையில் தள்ளிவரும் கொடுமைகளையும்-காவல்துறையை ஏவி ஆட்சி நடத்துவதைத்தான் கண்டு வருகிறோம்.
எனவே, இந்த சூழ்நிலையில் எனது பிறந்தநாளைக் கொண்டாட தேவையில்லை என்பதே எனது கண்டிப்பான வேண்டுகோள். என்மீது உண்மையான அன்பு கொண்டுள்ள தி.மு.க. நண்பர்கள் எளிய வகையில், நலிந்த ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை "இளைஞர் எழுச்சி நாள்'' என்ற பெயரில் வழங்கிட பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
1953ம் ஆண்டு பிறந்த மு.க.ஸ்டாலினுக்கு வருகிற மார்ச் 1ம் தேதி 59 வயது முடிந்து 60 வயது பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications