மானாமதுரையில் சந்தைக்குள் புகுந்த அரசு பஸ் மோதி 3 பேர் பலி, 10 பேர் படுகாயம்
மானாமதுரை: மானாமதுரையில் சந்தைக்குள் புகுந்த அரசு பஸ் மோதி 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர், 10 பேர் படுகாயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை முத்தநேந்தல் பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாரச் சந்தை கூடுகின்றது. முத்தநேந்தலை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் முத்தநேந்தல் அருகே செல்கையில் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்ஸை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகில் உள்ள சந்தைக்குள் புகுந்தது. அங்கு நின்ற ஆட்டோ மீது மோதிய பிறகு, கடைகளுக்குள் புகுந்தது. அதன்பிறகு பஸ் ஒரு மரத்தில் மோதி நின்றது.
இதில் சந்தையில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இவ்விபத்தில் வாரச் சந்தையில் பழம் வாங்கிக் கொண்டிருந்த இடைக்காட்டூரைச் சேர்ந்த செய்யது காலீத் மனைவி ரம்ஜான்கனி (45), கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பெரியசாமி(65) ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த 11 பேர் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு மானாமதுரை தபால் அலுவலக ஊழியர் தங்கமணி (55) சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இது குறித்து மானாமதுரை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications