சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: பிரச்சாரத்தை துவங்கிய திமுக வேட்பாளர்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமார் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
சங்கரன்கோவிலில் வரும் மார்ச் மாதம் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் திமுக சார்பில் ஜவகர் சூரியகுமார் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்தது. இதற்கான நேர்காணலில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றிருந்த அவர் ரயில் மூலம் நேற்று காலை சங்கரன்கோவில் வந்தார். ரயில் நிலையத்தில் அவருக்கு திமுகவினர் மேளதாளம் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் வாக்கு கேட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திமுக ஆட்சியின் சாதனைகளை கூறி தொகுதி மக்களிடம் வாக்கு கேட்பேன். திமுக ஆட்சியில் தான் சங்கரன்கோவில் தொகுதியில் அதிக நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன் என்றார்.