கோவையில் இலங்கை நர்சுகளுக்கு பயிற்சி-கேரள வைத்தியசாலைக்கு பெரியார் தி.க. கண்டனம்
கோவை: கோவையில் இலங்கை நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரியவைத்திய பார்மசியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெரியார் தி.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
கோவையை அடுத்த நவக்கரையில் ஆரியவைத்திய பார்மசி உள்ளது. இங்கு இலங்கையை சேர்ந்த 5 நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக பெரியார் தி.க. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த அவர் ஆரிய வைத்திய சாலையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பயிற்சி பெற்ற இலங்கை நர்சுகள் 5 பேரும் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஆரிய வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இருப்பினும், கோவையில் இலங்கை நர்சுகளுக்கு பயிற்சி அளித்ததை கண்டித்து கோவையில் திருச்சி ரோட்டில் உள்ள ஆரிய வைத்திய சாலை முன்பு பெரியார் தி.க. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்த வைத்தியசாலையை நடத்தி வருபவர் தமிழர்களுக்கு விரோதமாகவே நடந்து கொள்கிறார். டேம் 999 படத்தை எடுத்த இயக்குநருக்குப் பாராட்டு விழா நடத்தியவர் இந்த கேரளக்காரர். அதேபோல இப்போது தமிழ் இனத்தை அழித்த சிங்கள இனத்தைச் சேர்ந்த நர்சுகளைக் கூட்டி வந்து பயிற்சி அளித்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications