மெக்சிகோ சிறையில் கைதிகள் பயங்கர மோதல்-44 பேர் பலி
மெக்சிகோ: மெக்சிகோவில் உள்ள சிறையில், கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 44 பேர் பலியாகினர். மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகின்றது.
மெக்சிகோவின் வடக்கு பகுதியை சேர்ந்த அப்போடகா என்ற இடத்தில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இச்சிறைச்சாலையில் மொத்தம் 3,000 கைதிகளை அடைக்கும் வசதி உண்டு. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் 30 சதவீதம் அதிகமான கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று சிறைச்சாலையின் 'டி' பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 2 தரப்பு கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. காலை 2 மணியளவில் ஏற்பட்ட மோதலின் போது, துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் சுட்டது சிறைச்சாலை அதிகாரிகளா அல்லது கைதிகளா என்பது தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பாதுக்காப்பை பலப்படுத்தினர். மோதலில் பலியான 44 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மோதலில் காயமடைந்து உயிர் தப்பியவர்கள் யாரும் இல்லை.
இது குறித்து தகவல் அறிந்த 400க்கும் மேற்பட்ட கைதிகளின் உறவினர், சிறை முன் குவிந்து பலியானவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். அதிகாலை நேரத்தில் சிறைச்சாலையில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்ட காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் மெக்சிகோவில் உள்ள மற்றொரு சிறைச்சாலையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 31 பேர் பலியானது குறிப்பிடத்தகக்து.












Click it and Unblock the Notifications