இடைத்தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரவீன் ஆலோசனை
திருநெல்வேலி: சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நெல்லையில் ஆலோசனை நடத்தினார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரவீன் ஆலோசனை நடத்தினார்.
பதட்டமான வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், துணை ராணுவ படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அவர் ஆலோசித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்திலும் பிரவீன்குமார் கலந்து கொண்டார்.
நாளை முதல் அமைச்சர்கள் முகாம்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்காக அனைத்து அமைச்சர்களும் நாளை முதல் முகாமிட உள்ளனர். மேலும் ஒரு பொறுப்பாளர்களுக்கு 3 உதவியாளர்கள் வீதம் நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட கட்சி பிரமுகர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்ற வியூகம் வகுத்துள்ளனர். புழுதி பறந்து கொண்டிருந்த சங்கரன்கோவில் சாலைகள் புத்தம் புதியதாக உருமாறி உள்ளன.
வேட்பு மனுத்தாக்கல்
அதிமுக வேட்பாளர் முத்து செல்வி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் 23ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 24ந் தேதி அக்கட்சி பொதுச்செயலர் வைகோ தலைமையிலும், தேமுதிக வேட்பாளர் முத்துகுமார் 25ந் தேதியும், திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், 27ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications