சங்கரன்கோவில் செல்லத் தயாராகிறார் ஜெயலலிதா... கிராமம் கிராமமாக போக திட்டம்

சங்கரன்கோவிலுக்கு மார்ச் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் முத்துச்செல்வி, திமுக சார்பில் ஜவஹர் சூரியக்குமார், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், தேமுதிக சார்பில் முத்துக்குமார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாமக ஆகியவை போட்டியிடாமல் விலகி ஓடி விட்டன. பாஜக தனது வேட்பாளரை நிறுத்தும் என்று தெரிகிறது. பிற கட்சிகளின் நிலை தெளிவாக இல்லை.
அதிமுக ஏற்கனவே தனது பணிகளைத் தொடங்கி ஒரு கட்டத்தை முடித்து விட்டது. நாளை வேட்பாளர் முத்துச்செல்வி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். ஏற்கனவே இவர் பிரசாரத்தையும் தொடங்கி விட்டார்.
32 அமைச்சர்கள் உள்பட 43 பேர் கொண்ட மெகா தேர்தல் பணிக்குழுவை முதல்வர் ஜெயலலிதா நியமித்து அவர்களும் பணியில் இறங்கி விட்டனர். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி வரை சற்று மந்த நிலைதான் காணப்படும். முதல்வரின் பிறந்த நாளுக்குப் பிறகுதான் தொகுதியில் அதிமுகவினர் முழு வீச்சில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.
மார்ச் 2வது வாரத்தில் ஜெயலலிதா பிரசாரத்திற்கு வரவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அவர் மார்ச் மத்தியில் அதாவது 12 அல்லது 13ம் தேதி சங்கரன்கோவில் போவார் என்று தெரிகிறது. கிராமம் கிராமமாக அவர் சென்று பிரசாரம் செய்யவுள்ளதாகவும் பேசப்படுகிறது.
திமுக தரப்பில் அதன் சூப்பர் ஸ்டாரான தலைவர் கருணாநிதி மார்ச் 15ம் தேதி பிரசாரம் செய்கிறார். அதேபோல மு.க.ஸ்டாலின், அன்பழகன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்யவுள்ளனர். பிரசார பணிகளை மு.க.அழகிரி தலைமையில் திமுகவினர் மேற்கொள்கின்றனர்.
மதிமுக தரப்பி்ல் வைகோ ஏற்கனவே புயல் வேகத்தில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். விஜயகாந்த்தும் விரைவில் பிரசாரத்தில் குதிக்கவுள்ளார். கூடவே பிரமேலதாவும் பிரசாரத்திற்கு வரவுள்ளார்.
மொத்தத்தில் மார்ச் மாத மத்தியில் சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரக் களம் படு சூடாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications