ஆப்கானிஸ் குர்ஆனை எரித்த அமெரிக்கப்படை: மன்னிப்பு கேட்ட அமெரிக்கா
காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப்படைகள் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்ததற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள பக்ரம் விமானப்படை தளத்தின் குப்பைக்கிடங்கில் எரிந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் கிடந்ததை உள்ளூர்வாசிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுமார் 2,000 ஆப்கானிஸ்தானியர்கள் அமெரிக்கர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் குப்பைகளுடன் குப்பையாக சேர்த்து குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு அமெரி்க்கா மன்னிப்பு கேட்டுள்ளது.
முன்னதாக போராட்டக்காரர்கள் அமெரிக்கப் படைவீரர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளின் தலைவர் ஜெனரல் ஜான் ஆலன் கூறுகையில், குப்பைக்கிடங்கில் போட்டு எரிக்கக் கொடுத்த புத்தகங்களுக்கு நடுவே தெரியாதத்தனமாக குர்ஆன் இருந்துள்ளது. எரிக்கக் கொடுத்தவற்றில் குர்ஆன் இருந்தது தெரிய வந்ததுமே அதை தடுத்து நிறுத்திவிட்டோம். இதை யாரும் வேண்டும் என்றே செய்யவில்லை என்றார்.
இதற்கிடையே பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், பக்ரம் விமானப் படை தளத்திற்கு அருகில் உள்ள சிறை நூலகத்தில் உள்ள குர்ஆன் மற்றும் பிற மத நூல்கள் தீவிரவாதத்தை தூண்டப் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனிதநூலான குர்ஆன் எரிக்கப்பட்டது துரதிர்ஷ்டமான சம்பவம் என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications