சரணடைய கொடுத்த வாய்ப்பை நிராகரித்து கொள்ளையர்கள் சுட்டதால் நாங்கள் திருப்பிச் சுட்டோம்-கமிஷனர்

சென்னை வேளச்சேரியில் இன்று அதிகாலை நடந்த வங்கிக் கொள்ளையர்கள் என்கவுண்டர் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார் காவல்துறை ஆணையர் திரிபாதி.
அப்போது அவர் கூறுகையில், சென்னை வங்கிக்கொள்ளையர்கள் தொடர்பாக நேற்று நள்ளிரவுவாக்கில் எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. அந்தத் தகவலைத் தெரிவித்தவர், போலீஸார் காட்டிய வீடியோ படத்தில் இருப்பது போன்ற ஒரு நபர் வேளச்சேரி வீட்டில் தங்கியிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து எங்களது போலீஸ் படையினர் இரவு 1 மணிவாக்கில் அங்கு விரைந்தனர்.
சம்பந்தப்பட்ட வீட்டை முற்றுகையிட்ட போலீஸார், கதவைத் தட்டி உள்ளே இருந்தவர்களை விசாரிக்க முயன்றனர். ஆனால் உள்ளே இருந்தவர்கள் திடீரென சிறு துப்பாக்கிகளை எடுத்த போலீஸாரை சுட ஆரம்பித்தனர். ஆனால் எங்களது போலீஸார், அதை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர். நிறைய மக்கள் இங்கு வசிக்கிறார்கள். அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும், எனவே சுடாதீர்கள், சரணடைந்து விடுங்கள் என்று பலமுறை எங்களது தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் தொடர்ந்து சுட்டபடி இருந்ததால், எங்களது படையினர் பூட்டை உடைத்துக் கொண்டு சுட்டபடியே உள்ளே சென்றனர். அங்கிருந்த ஐந்து பேரும் சுடப்பட்டனர். கொள்ளையர்கள் சுட்டதில் எங்களது தரப்பில் இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு இடுப்பிலும், இன்னொருவருக்கு வயிற்றுப் பகுதியிலும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காயமடைந்த ஐந்து பேர் மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்களும் உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இன்ஸ்பெக்டர்கள் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம், ஐந்து பேரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாகடர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக அடையார் துணை ஆணையர் சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கை நீதித்துறை நடுவரின் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு நீதித்துறை நடுவரின் விசாரணையில் உள்ளது. விசாரணை முடிவில் அனைத்து விவரங்களும் தெரிய வரும்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை வைத்துத்தான் தற்போது இந்த ஐந்து பேரையும் அடையாளம் கண்டுள்ளோம். அதன்படி அவர்களில் 4 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த வாக்காளர் அடையாள அட்டை நிஜமானதா, போலியானதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் அடையாளம் சரியானதா என்பது தெரிய வரும்.
என்கவுண்டர் நடந்த வீட்டிலிருந்து ஐந்து பிஸ்டல்கள், 2 ரிவால்வர்கள், செல்போன்கள், டிரைவிங் லைசென்ஸ், ரூ. 14 லட்சம் பணம் அடங்கிய பை, சிம் கார்டுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன என்றார்.
ஐந்து பேரும் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்திய பிறகே போலீஸார் சுட்டனரா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆணையர், அவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களுக்கு இந்த இரண்டு வங்கிக் கொள்ளைகளிலும் தொடர்பு இருப்பது மட்டும் உறுதியாகத் தெரியும்.அதை உறுதிப்படுத்திக் கொண்டே பிறகே போலீஸார் சென்றனர். அவர்களால் மக்களுக்குப் பாதிப்பு வந்து விடக் கூடாது என்பதற்காகவே, அவர்கள் சுடத் தொடங்கிய பின்னரே போலீஸ் தரப்பில் பதிலடி தரப்பட்டது. தற்காப்புக்காக சுடும்போது எதிரில் நிற்பவர் யார் என்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார் கமிஷனர்.












Click it and Unblock the Notifications