வருமானவரி விவரம் தனிப்பட்ட விவகாரம்: சோனியா காந்தி
வருமானவரி கணக்கு கோரிக்கை
டெல்லி வருமான வரி உதவி ஆணையருக்கு சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.கோபால கிருஷ்ணன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு அனுப்பி இருந்தார்.
அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 2000-2001 மற்றும் 2010-2011-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்த விவரங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 11-ன் கீழ் தெரிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்..
இதையடுத்து சோனியாவுக்கு வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அக்கடிதத்துக்கு சோனியா அனுப்பியுள்ள பதில்
எனது சொத்து கணக்கு, வருமானவரி செலுத்திய விவரங்கள் தனிப்பட்ட விஷயம்.
பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான் அதை தேவையில்லாத 3-வது நபருக்கு பரிமாற முடியாது.
அது எனது தனிப்பட்ட பாதுகாப்பு விவகாரத்தில் தலையிடுவதாகும். தனி நபர் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் ரகசியமானவை. பாதுகாக்கப்பட வேண்டியவை.
1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 138-வது பிரிவின் கீழ் வேறு யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று அதில் அவர் கூறியுள்ளார்.
2-வது முறை நிராகரிப்பு
சோனியாவின் பதிலை மனுதாரரான சென்னை கோபாலகிருஷ்ணனுக்கு வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
சோனியாவின் வருமான வரி கணக்கு விவரங்களை முன்னர் ஒருமுறை கோபாலகிருஷ்ணன் கோரியிருந்தார்.
அதற்கு வருமானவரித்துறை நேரடியாக மறுப்புத் தெரிவித்து கடிதம் அனுப்பியது.இம்முறை சோனியாவிடம் பதிலைப் பெற்று அனுப்பி வைத்துள்ளது.