எடியூரப்பாவுக்கு பாஜக ஆப்பு.. கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் போகலாம்: கட்காரி
பெங்களூர்: பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக யார் மிரட்டினாலும் அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.. வெளியேறிக் கொண்டிருக்கலாம் என்று அக்கட்சித் தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடக மாநில பாஜகவில் எந்த பிளவும் இல்லை. சிறு சிறு பிளவுகள் இருக்கலாம். அவற்றை உத்தரப் பிரதேச தேர்தல் முடிந்த பின்னர் சரி செய்வோம்.
மாநிலத்தின் முதல்வராக உள்ள சதானந்த கெளடாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மக்கள் ஆதரவு பெற்றவர்தான். ஆனால், அவரது பெயர் லோக் ஆயுக்த அளித்த சுரங்க முறைகேடு அறிக்கையில் உள்ளது.
இது கட்சியின் மூத்த தலைவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதன்பிறகு அவருக்கு உரிய பதவி வழங்கப்படும்.
பாஜக கட்சி எந்த ஒரு சாதிக்கோ, சமுதாயத்துக்கோ சொந்தமானது அல்ல. அதற்கு அதன் கொள்கை முக்கியம்.
எடியூரப்பாவுக்கு எச்சரிக்கை
கட்சியில் இருந்து விலகுவதாக யார் மிரட்டினாலும் அவர்கள் நாளை வரை காத்திருக்க வேண்டியது இல்லை.
இன்றே அவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல்லலாம்.
மூன்றரை ஆண்டுகள் மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதில் எங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இப்போது ஆட்சியை சதானந்த கெüடா சிறப்பாக நடத்தி வருவதால், அவரே தொடர்ந்து முதல்வராக நீடிப்பார்.
கட்சியை கட்டிக்காத்தவர் எடியூரப்பா என்பதில் சந்தேகமில்லை. தனக்கு பதவி வழங்கக் கோரி அவர் கட்சியின் மேலிடத்துக்கு எந்தவித கெடுவும் விதிக்கவில்லை என்றார்.
ஆனால் பிப்ரவரி 27-ந் தேதிக்குள் தம்மை முதல்வராக்க வேண்டும் அல்லது கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று எடியூரப்பா முன்னர் கெடு விதித்திருந்தார்.
மேலும் தமது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விருந்து அளித்து தமது பலத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் பெங்களூர் வந்த கட்கரியையும் எடியூரப்பா சந்தித்து தமது கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார். ஆனால் பாஜக மேலிடம் எடியூரப்பாவை போனால் போகட்டும் என்ற பாணியில் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எடியூரப்பா பிடிவாதம்
பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டினால் எடியூரப்பா மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார்.
தமது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் எடியூரப்பா, பிப்ரவரி 27-ந் தேதி வரை தாம் விதித்த கெடுவுக்காக காத்திருப்பார் என்று கூறப்படுகிறது.
பிப்ரவரி 27-ந் தேதிக்குப் பிறகுதான் தமது குடைச்சல் அஸ்திரத்தை எடுப்பார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications