கொலைகார இத்தாலியர்கள் மீதான வழக்கு இந்திய சட்டப்படிதான் நடைபெறும்: ஏ.கே.அந்தோணி
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் இருவரை கேரள கடற்பரப்பில் சுட்டுக் கொலை செய்த இத்தாலியர்கள் தொடர்பான வழக்கு இந்திய சட்டப்படிதான் நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மீனவர்களைப் படுகொலை செய்த இத்தாலியர்கள் மீதான வழக்கு இந்தியச் சட்டப்படிதான் நடைபெறும். இந்த நாட்டில் நீதித்துறை என்பது சுதந்திரமானது.
2 மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது. அதே நேரத்தில் வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்த வழக்கை நடத்துவதில் கேரள அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது. கேரளாவின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசும் முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது என்றார் அவர்.
தமிழ்நாட்டின் வாலண்டைன் மற்றும் அஜீஸ் பிங்கி ஆகியோர் கேரள மநிலத்தின் கொல்லம் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த 15-ந் தேதி இத்தாலிய சரக்குக் கப்பலில் இருந்த கடற்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இத்தாலியின் நெருக்கடியையும் மீறி படுகொலை நடந்த சில நாட்களுக்குப் பின்னர் இரண்டு இத்தாலியர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இத்தாலி கப்பலில் இருந்து துப்பாக்கிகளும் வெடிபொருட்களையும் கேரள காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications