கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு தாம்ப்ராஸ் கோரிக்கை
சென்னை: பிராமணர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி மீது மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி பிராமண சமூகத்தினரை சம்மந்தமின்றி அர்த்தமற்ற முறையில் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த செயலை தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) வன்மையாகக் கண்டிக்கிறது. ஜாதி வெறுப்பினை உருவாக்கித் தான் அரசியல் செய்ய வேண்டும் என்கிற பரிதாப நிலைக்கு கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார் என்பதையே இந்த சம்பவம் காட்டுகின்றது.
எப்பொழுதெல்லாம் ஆட்சியில் இல்லையோ, எப்பொழுதெல்லாம் அரசியல் நெருக்கடியில் இருக்கின்றாரோ அப்பொழுதெல்லாம் பிராமண துவேஷ அணுகுமுறையினைக் கையாளுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அவருக்கு எப்போது தேவையோ அப்போது பிராமணர்களை பயன்படுத்திக் கொள்வார்.
பிராமணர்கள் ஆண்டவனுக்கும், தர்மத்திற்கும், சத்தியத்திற்கும் பயந்தவர்கள். சட்டத்தின் முன்பு பொறுப்புடன், பயத்துடன் இருப்போம். ஆனால் வேறு எதற்கும், எவருக்கும் பயப்பட மாட்டோம், பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
இவருடைய இந்த அநாகரீகமான அறிக்கையினை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பிராமணர்களின் உணர்வுகளைப் புண்படுத்தி அவர்களுக்கு எதிராக ஒரு சிலரை வன்முறைக்குத் தூண்டி விடுகின்ற மு.கருணாநிதி மீது மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications