போலி என்கவுன்டர்: தலைமறைவாக இருந்த ராஜஸ்தான் ஏடிஜிபி சரண்!
ஜெய்ப்பூர்: போலி என்கவுன்டர் தொடர்பாக தலைமறைவாக இருந்த ராஜஸ்தான் மாநில கூடுதல் டிஜிபி ஜெயின் நேற்று சரணடைந்தார்.
2006-ம் ஆண்டு தாராசிங் என்ற கள்ளச்சாராய வியாபாரியை என்கவுன்டர் என்ற பெயரில் திட்டமிட்டு சுட்டுக் கொன்றதாக கடந்த ஜூன் மாதம் ஜெயின் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதையடுத்து 59 வயதான ஜெயின் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தில் நேற்று அவர் சரணடைந்தார். அவரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயினின் பாஸ்போர்ட்டை முடக்கி அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ரூ10 லட்சம் பரிசும் அறிவித்து மெனக்கெட்டது சிபிஐ. ஒரு கட்டத்தில் இண்ட்டர்போலின் உதவியுடன் ரெட் கார்னர் நோட்டீசும் விடப்பட்டது.
ஜெயின் இந்தியாவில்தான் தலைமறைவாக இருந்தாரா அல்லது வெளிநாட்டில் பதுங்கியிருந்தாரா என்பது தெரியவரவில்லை.
இந்திய காவல்துறை வரலாற்றிலேயே சி.பி.ஐ.யால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறப்பு "ஜெயினுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது.