நாடு தழுவிய பொது 'ஸ்டிரைக்': தமிழகத்தில் பாதிப்பில்லை- சில மாநிலங்களில் பாதிப்பு
சென்னை: 7 வங்கி ஊழியர் சங்கங்கள், 11 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட சிறிய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அழைப்பை ஏற்று இன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. இருப்பினும் இதனால் பல மாநிலங்களில் பாதிப்பில்லை. சில மாநிலங்களில் மட்டும் பாதிப்பு தென்பட்டது.
தமிழகத்தில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் ஓடுவதில் சிரமம் இல்லை. அதேசமயம், கோவை, திருப்பூரில் ஸ்டிரைக் பாதிப்பு இருந்தது.
விலைவாசி உயர்வு, லாபம் தரும் பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மற்றும் தொழிலாளர் சட்ட விதி மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கம்யூனிஸ்ட் சார்பு சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ் சார்பு ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக களத்தில் குதித்தன. நாடு முழுவதும் முதல் முறையாக 10 கோடி தொழிலாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் இது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை சேர்ந்த 9 லட்சம் ஊழியர்கள் இன்றைய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்திருந்தது. இதனால் வங்கிப் பணிகள் அடியோடு முடங்கின.
முன்னதாக பொது வேலை நிறுத்தத்தை கைவிடும்படி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தொழிற்சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தனர். ஆனால் இதை தொழிற்சங்கங்கள் நிராகரித்து விட்டன.
மேற்கு வங்கத்தில்
மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அரசுப் பேருந்துகளும், டாக்சிகளும் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
கேரளாவில் போராட்டத்திற்கு முழு ஆதரவு காணப்பட்டது. பஸ், ஆட்டோ என எதுவும் ஓடவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
ஆந்திராவில் ஆங்காங்கு ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் காணப்பட்டன. டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. வங்கிப் பணிகளும் பாதிக்கப்பட்டன.
தமிழகத்தில் பெரிய பாதிப்பில்லை
பொது வேலைநிறுத்தத்தில் அதிமுக தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை. இதனால் தமிழகத்தில் அரசுப் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. அனைத்து ஊர்களிலும் அரசு பஸ்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. இருப்பினும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்டோர் மட்டும் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டனர்.
சென்னையில் வழக்கம் போல பஸ்கள், ஆட்டோக்கள் ஓடுகின்றன. ரயில் போக்குவரத்தும் வழக்கம் போல உள்ளது. கடைகள், தொழில் நிறுவனங்கள் திறந்துள்ளன. ஸ்டிரைக்கால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.
அரசு டெப்போக்கள் முன்பு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 275 டெப்போக்களிலும் கடந்த 26-ந் தேதி இரவில் இருந்தே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சென்னையில் பஸ் போக்குவரத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் பொதுமக்கள், மாநகர போக்குவரத்து கழக கட்டுப்பாட்டு அறையை 94450 30533 என்ற செல்போனிலும், அரசு விரைவு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டு அறையை 24794709 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை,திருப்பூரில் பாதிப்பு
அதேசயம், கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் சற்று அதிகமாக உள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஸ்டிரைக்குக்கு நல்ல ஆதரவு காணப்பட்டது. 2 லட்சம் பின்னலாடைத் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் 10 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் மிகக் குறைந்த அளவிலேயே ஓடுகின்றன. அரசு பஸ்கள் வழக்கம் போல இயங்குகின்றன.
ஆட்டோக்களுக்குத் தீவைப்பு
இந்த நிலையில் கோவை, காந்திமாநகரில் அதிமுக, இந்து மக்கள் கட்சி இடையே மோதல் மூண்டது. ஸ்டிரைக்கில் பங்கேற்கக் கூடாது என்று கூறி அதிமுகவினர் தாக்கியதாக இந்து மக்கள் கட்சி புகார் கூறியுள்ளது.
இந்த மோதலில் 2 ஆட்டோக்கள் எரிக்கப்பட்டன. ஒரு கார் மற்றும் 4 ஆட்டோக்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
கேரள பஸ்கள் வரவில்லை
ஸ்டிரைக் காரணமாக தமிழகத்திலிருந்து எந்த அரசுப் பேருந்தும் கேரளாவுக்கு போகவில்லை. குமரி மாவட்டம் வழியாக செல்லும் பஸ்கள் களியக்காவிளையுடனும், பாலக்காடு வழியாக செல்பவை வாலையாறுடனும் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல கேரளாவிலிருந்தும் பஸ்கள் எதுவும் வரவில்லை. ஸ்டிரைக் முடிந்த பிறகே பஸ் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.