"இந்த வீடியோவை சேவ் பண்ணி வைங்க.." விஜய்யின் வெற்றியை ஓராண்டுக்கு முன்பே கணித்த பிரசாந்த் கிஷோர்
சென்னை: தமிழ்நாடு தேர்தலில் விஜய் கட்சி யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு வரை விஜய் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் ஓராண்டுக்கு முன்பே விஜய்யின் இந்த வெற்றியைப் பிரபல அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கணித்திருந்தார். அவரது வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழக அரசியலில் ஒரு அறிமுகக் கட்சி, அதுவும் எவ்வித முன் அனுபவமும் இல்லாத ஒரு நடிகரின் தலைமையில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு வரை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். அப்படியொரு மிகப் பெரிய வெற்றியை தவெக பெற்றிருக்கிறது.

தவெக
எக்சிட் போல்களிலும் கூட பெரும்பாலான சர்வேக்கள் திமுக ஆட்சி அமையும் என்றே கணித்திருந்தது. தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்கள் வரை வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா மட்டுமே கூறியது. இருப்பினும், அப்போது கிட்டத்தட்ட யாருமே அந்த சர்வே முடிவை நம்பவில்லை. அது ஒரு சாத்தியமற்ற நம்பர் என்றே அரசியல் வட்டாரத்தில் விமர்சிக்கப்பட்டது. ஆனால், அந்தப் புள்ளிவிவரங்கள் தான் அப்படியே நடந்துள்ளது. இது தமிழக அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாந்த் கிஷோர்
இதற்கிடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தந்தி டிவிக்கு அளித்த நேர்காணல் இப்போது டிரெண்டாகி வருகிறது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே கூட விஜய் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருந்தார். அதாவது விஜய் தனித்துப் போட்டியிட்டால் தமிழகத்தை வெல்ல அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று அன்றே மிக உறுதியாகக் கணித்திருந்தார்.
அன்றே சொன்ன பிரசாந்த் கிஷோர்
மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களை ஒரு புதிய கட்சியால் எட்டிப் பிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு பிகே, "நிச்சயமாக முடியும், இந்த வீடியோவைப் பத்திரமாக சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் முடிவுகள் வரும்போது இதைப் போட்டுப் பாருங்கள்" என்று அவர் அப்போதே சேலஞ்ச் விடுத்திருந்தார். அந்த வீடியோ இப்போது மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதில் விஜய்யுடனான தனது உறவு குறித்துப் பேசிய அவர், தாங்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நண்பர்களாகவே பழகி வருவதாகவும், தங்களுக்குள் பொதுவான கொள்கை ரீதியான ஒற்றுமைகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தான் அவருக்கு ஒரு அரசியல் ஆலோசகர் கிடையாது என்று அவர் தெளிவுபடுத்தியிருந்தாலும், அவர் அப்போதே விஜய் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என்பதைச் சரியாகக் கணித்தார்.
இரண்டுமே சரி
மேலும், அவர் தனது கட்சியையும் விஜய் கட்சியையும் ஒப்பிட்டுப் பேசும்போது, "எனது கட்சிக்கும் விஜய் கட்சிக்கும் ஒரே நிலைதான். எங்களுக்கு மக்கள் முழுமையாக ஆதரவு தருவார்கள். இல்லையென்றால் மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள். நடுவில் 10%-12% என்பதற்கு எல்லாம் வாய்ப்பு இல்லை" என்று கூறியிருந்தார். அதாவது மக்கள் முழுமையாக தங்களை ஆதரித்து மிகப் பெரிய வெற்றியைத் தருவார்கள்.. இல்லை என்றால் மிக மோசமான தோல்வியைக் கொடுப்பார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவர் சொன்னது போலவே, கடந்தாண்டு நடந்த பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தார். மறுபுறம் தமிழ்நாடு தேர்தலில் விஜய் மிகப் பெரிய வெற்றியைச் சந்தித்திருக்கிறார். இதன் மூலம் அவரது இரு கணிப்புகளுமே உண்மையாகி இருக்கிறது.














Click it and Unblock the Notifications