வேலூர் சிறையில் பிளஸ்டூ தேர்வு எழுதக் காத்திருக்கும் பேரறிவாளன், முருகன்
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோர் இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வு எழுதவுள்ளனர். இவர்கள் மற்றும் பிற கைதிகளுக்காக சிறைக்குள்ளேயே தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.
சிறைக் கைதிகள் பலரும் தங்களது படிப்பை சிறைக்குள்ளேயே தொடருகின்றனர். பலர் பள்ளிப் படிப்பையும், சிலர் கல்லூரிப் படிப்பையும் சிறையில் இருந்தபடி படிப்பது வழக்கம். அந்த வகையில், வேலூர் சிறையில், இந்த ஆண்டு 8 பேர் பிளஸ்டூ தேர்வு எழுதவுள்ளனர். இவர்களில் 6 பேர் புழல் சிறை மையத்திற்கு கொண்டு வரப்பட்டு தேர்வு எழுதவுள்ளனர். மற்ற இருவரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோர் ஆவர். இவர்கள் வேலூர் சிறையிலேயே தேர்வை எழுதவுள்ளனர்.
இதுகுறித்து வேலூர் மத்தியசிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி கூறுகையில்,
வேலூர் சிறையில் கைதிகளாக இருக்கும் 8 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 2 பேர் வேலூர் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத உள்ளனர். அந்த 2 பேருமே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் கைதிகளான பேரறிவாளன், முருகன்.
மற்ற 6 பேரும் சென்னை புழல் சிறையில் அமைக்கப்படும் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தேர்வு நடத்தப்படும் என்றார்.