வேலூரில் இப்போதே சுட்டெரிக்கும் வெயில்-100 டிகிரியைத் தொட்டதால் மக்கள் அவதி
வேலூர்: தமிழகத்தில் கோடை காலம் வேகமாக பிக்கப் ஆக ஆரம்பித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இரவிலும், அதிகாலையிலும் பனி இருந்தாலும் பகலில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. வெயிலின் தலைநகரான வேலூரில் இப்போதே 100 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
கோடைகாலம் பெரும்பாலும் மார்ச் மத்தியில்தான் சுட்டெரிக்க ஆரம்பிக்கும். ஆனால் இப்போதே தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் வெளுக்க ஆரம்பித்துள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால் வேலூரில் இப்போதே 100 டிகிரியை வெயில் தாண்டியுள்ளதால் மக்கள் மண்டை காய்ந்து போயுள்ளனர்.
கத்திரி வெயில் காலத்தின்போது வேலூரில் வெயில் அளவு 110 டிகிரி வரை வெளுத்துக் கட்டும். ஆனால் இந்த ஆண்டு அதை விட அதிகமாக இருக்குமோ என்று மக்கள் பயப்படும் அளவுக்கு இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது.
இந்த ஆண்டு வேலூரில் பிப்ரவரி மாதமே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல்முறையாக 100 டிகிரியைத் தொட்டது.
வெயில் வெளுத்துக் கட்டி வருவதால் குளிர்பான விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கூடவே மோர், இளநீர் விற்பனையும் பிக்கப் ஆகியுள்ளது. சாலையோரங்களில் மோர், இளநீர், நுங்கு போன்றவற்றின் விற்பனையைப் பார்க்க முடிகிறது. மக்கள் வெயிலுக்குப் பயந்து தொப்பி, முக்காடு உள்ளிட்டவற்றுக்கு மாறி வருகின்றனர்.
ஒருபக்கம் வெயில் வறுக்கிறது என்றால் மறுபக்கம் மின்தடை வேறு மக்களை வெறுப்படிக்க வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications