11 கன்னியாகுமரி மீனவர்களை பிடித்துச் சென்ற மாலத்தீவு கடற்படை!
சென்னை: சர்வதேச கடல் எல்லையை மீறி தங்கள் கடல் எல்லையில் புகுந்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை மாலத் தீவு கடற்படை கைது செய்துள்ளது.
இவர்கள் அனைவருமே தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தேன்துறையை, முள்ளுத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இது குறித்து துத்தூர் பஞ்சாயத்துத் தலைவரான ஜான் அலோஸியஸ் கூறுகையில், இரவிபுத்தேன்துறையை, முள்ளுத்துறை ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு மீன் பிடி படகில் கடந்த 23ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர்.
ஆனால், ஒரு வாரம் ஆகியும் அவர்கள் திரும்ப வரவில்லை. இந் நிலையில் மாலத்தீவு கடற்படையிடமிருந்து படகின் உரிமையாளரின் மனைவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள், இந்தப் படகு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மாலத்தீவு கடல் பகுதிக்குள் புகுந்ததால் தங்களால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர் என்றார்.
இதுவரை இலங்கை கடற்படை தான் தமிழக மீனவர்களை கைது செய்தும், கொலை செய்தும் வந்தது. இப்போது அந்த வரிசையில் மாலத்தீவும் சேர்ந்துவிட்டது. 'மிக பலமான' மத்திய அரசு ஆட்சியில் இருப்பதால், குட்டிக் குட்டி நாடுகளுக்குக் கூட இந்தியா மீது கொஞ்சம் கூட பயம் இல்லாமல் போய்விட்டது.
அதுவும் தமிழக மீனவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை நிருபமா ராவ்களும், எம்.கே.நாராயாணன்களும், சிவசங்கர் மேனன்களும் உருவாக்கிவிட்டதால், இனியும் என்னென்ன நடக்குமோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications