மின்வெட்டிலிருந்து தப்பி வந்தது நீலகிரிக்கும் 'ஆப்பு'-இன்று முதல் 4 மணி நேரம் கட்!
ஊட்டி தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்பட மாநிலம் முழுவதுமே மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதிலிருந்து தப்பி வந்த நீலகிரி மாவட்டத்திலும் இன்று முதல் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு தினசரி 4 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் மின்பற்றாக்குறை நிலவுகிறது. சென்னை உள்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஷிப்ட் போட்டு மின்தடையை அமல்படுத்தி வருகின்றனர். சென்னையில் குறைந்தது 2 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் 3 மணி நேரம் மின்வெட்டு அமலாவதாக கூறப்படுகிறது. மாவட்டங்களில் குறைந்தது 8 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.
அதேசமயம், நீலகிரி மாவட்டம் மட்டும் இது நாள் வரை மின்வெட்டிலிருந்து தப்பி வந்தது. இன்று முதல் அவர்களுக்கும் ஆப்படித்து விட்டார்கள். அங்கு இன்று முதல் தினமும் 4 மணி நேரம் மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். அவர்கள் தங்கள் பயிரிடும் தேயிலையை தொழிற்சாலைகளுக்கு அனுப்புவது வழக்கம். இன்று முதல் அமல்படுத்தப்படும் மின்வெட்டால் தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
ஏற்கனவே பச்சை தேயிலை விலை வீழ்ச்சியால் தொழில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. ஏராளமான தேயிலை தொழிலாளர்கள் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வேலை தேடி சென்றனர். திருப்பூர் பகுதியிலும் கடும் மின் வெட்டு நிலவியதால் மீண்டும் ஊருக்கு திரும்பினார்கள்.
தற்போது நீலகிரி மாவட்டத்திலும் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது தொழிலாளர்களுக்கு பேரிடியாக உள்ளது.
மின்விடுமுறை அமலுக்கு வந்தது
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளுக்கான வாராந்திர மின் விடுமுறை திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி ஒவ்வொரு மண்டலத்திற்கும் வாரம் ஒரு நாள் முழுமையாக மின்சாரம் இருக்காது.












Click it and Unblock the Notifications