வெயிலிலிருந்து தப்பிக்கனும்னா சொல்றதை கேளுங்க...: ஒரிசா அரசு எச்சரிக்கை
புவனேஸ்வர்: ஒரிசா மாநிலத்தில் கோடைகால வெயிலின் தகிப்பு தாங்கவே முடியாத அளவுக்கு இருக்கும் என்பதால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போதே தொடங்கிவிட்டது.
முதலமைச்சர் நவீன்பட்நாயக் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு வருவாய்துறை அமைச்சர் சூர்ய நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பள்ளிக்கூடங்களில் தேர்வுகளை காலை நேரத்திலேயே நடத்தி முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில் குடிநீர், மின்சாரத்தை தடையின்றி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அலுவலகப் பணிகளையும் காலை நேரத்திலேயே மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வண்டி ஓட்டாதீங்க
மார்ச் 31-ந் தேதிக்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் உச்சகட்ட வெயில் நேரமான முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணிவரை பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று போக்குவரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டுவோரும் முன் எச்சரிக்கையாக குடிநீர் மற்றும் முதலுதவி சாதனங்களை பாதுகாப்புக்ககாக எடுத்துச் செல்ல வேண்டும்.
இதேபோல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய டெண்ட்களை அமைத்துத் தரவேண்டும் என்றும் தொழிலாளர் நலத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முற்பகல் 11 மணி முதல் 3 மணிவரை தொழிலாளர்களை பணி செய்ய விடக்கூடாது என்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications