ராஜபக்சே ஆக நினைக்கிறார் ப.சிதம்பரம்: சொல்கிறார் தா.பா.
திருச்சி: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்காது என்றும், எந்த கட்சியையும் எதிர்க்காது என்றும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் பேசிய பாண்டியன், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை. எங்கள் கட்சியினர் யாருக்கு ஓட்டு போடுவர் என்பதை பகிரங்கமாகக் கூற முடியாது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை இன அழிப்பு போர் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி மார்ச் 6ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது. இதில் பங்கேற்க, அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
தமிழகத்தில் மின்வெட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு ஏதும் வரவில்லை. மாறாக மின்வெட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்பாகத் தான் அறிக்கைகளை அரசு வெளியிடுகிறது. கல்வி, மருத்துவம் ஆகியவை மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டை தடுக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தீவிரவாத தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்கிறார். அந்த சட்டத்தால் நிரபராதிகளும் பாதிக்கும் ஆபத்து உள்ளது. இதை கொண்டு வருவதன் மூலம், ராஜபக்சே ஆக நினைக்கிறார் சிதம்பரம். இச்சட்டம் கொண்டு வந்தால், மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படும் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications