கருணாநிதியின் 3 பாதுகாப்பு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் ரெய்டு

சோதனைக்குள்ளாகியுள்ள அதிகாரிகளின் பெயர்கள்- டிஎஸ்பி பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் கணேசன், வினோதன் ஆகியோர். நெசப்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட 6 இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு முறைகேடாக வீட்டு வசதி வாரியத்தின் வீடுகளையும், வீட்டு மனைகளையும் இவர்கள் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்பி பாண்டியனின் வீடு மயிலாப்பூரில் உள்ளது. அங்கு காலை 7 மணி முதல் சோதனை நடந்தது. அதேபோல கணேசனின் வீடு நெசப்பாக்கத்தில் உள்ளது. வினோதன் வீடு கே.கே.நகரில் உள்ளது.
சர்ச்சை என்ன?
பாண்டியன், கணேசன் மற்றும் வினோதன் ஆகிய மூவருமே கடந்த 1998ம் ஆண்டு மார்ச் மாதம் முகப்பேர் ஏரி திட்டத்தில் 4780 சதுர அடி நிலம் ரூ.75 லட்சத்துக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் இடம் வாங்கினர். அந்த இடத்தை உடனடியாக கிரீன்வேஸ் சாலையில் வசிக்கும் கவுரி மற்றும் அவரது மகள் பத்மா ஆகியோரிடம் 3 பேரும் விற்பனை செய்தனர். 3 பேருக்கும் அடுத்தடுத்த இடம் என்பதால் கவுரி மற்றும் பத்மா ஆகியோர் வாங்கினர்.
இந்தப் பணத்தைக் கொண்டு உடனடியாக வீட்டு வசதி வாரியத்துக்கான பணத்தையும் ஒரே நாளில் கட்டினர். இது அரசு விதிமுறையை மீறியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு புகார்கள் வந்தன.
ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர், எப்படி ரூ.75 லட்சத்தை ஒரே நாளில் கட்ட முடிந்தது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஏடிஜிபி டி.கே.ராஜேந்திரன் டிஐஜி வெங்கட்ராமன், எஸ்பி துரைக்குமார் ஆகியோரது மேற்பார்வையில் கூடுதல் எஸ்பி சுப்பையா, டிஎஸ்பிக்கள் சோமசுந்தரம், சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர்தான் இன்று ரெய்டில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications