கல்வி அதிகாரி திட்டியதால் ஆசிட் குடித்த ஆசிரியர்- பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை
சென்னை: கல்வி அதிகாரி அவதூறாகப் பேசி கண்டித்ததால் மனமுடைந்த ஆசிரியர் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் தொண்டை, குடல் ஆகியவை வெந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பாக கல்வி அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (40). இவர் சென்னை தண்டையார்பேட்டை புத்தர் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். மாதவரம் மில்க் காலனியில் உள்ள வாடகை வீட்டில் மனைவி சங்கீதா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்.
ஜெகதீஸ்வரன் வேலை செய்யும் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவுக்கு கல்வி அதிகாரி கே.ரவிச்சந்திரன் விருந்தனராக அழைக்கப்பட்டிருந்தார். நேற்று காலை 10 மணியளவில் பள்ளிக்கு வந்த கல்வி ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றார். அங்கு ஒவ்வொரு ஆசிரியர்களாக அழைத்து பாடங்கள் எடுப்பது குறித்து கேட்டறிந்தார்.
அப்போது ஆசிரியர் ஜெகதீஸ்வரனிடம் 9, 10ம் வகுப்பு மாணவிகளின் ரெக்கார்ட் நோட்டுகளை கேட்டுள்ளார். ஆண்டு விழா நடப்பதால் இன்னும் மாணவிகளிடம் இருந்து ரெக்கார்ட் வாங்கவில்லை என்று ஜெகதீஸ்வரன் கூறியுள்ளார். இதனையடுத்து அவரைக் கண்டித்த கல்வி அதிகாரி மாலை 4 மணிக்கு மாநகராட்சியில் உள்ள அலுவலகத்தில் தன்னை சந்திக்குமாறு கூறிவிட்டு சென்றார். அப்போது அவதூறாகப் பேசியுள்ளார் ரவிச்சந்திரன் என்று கூறப்படுகிறது.
சக ஆசிரியர்கள் பலர் முன்பு தன்னை கண்டித்ததால் அவமானம் அடைந்த ஜெகதீஸ்வரன் பள்ளி ஆய்வுக் கூடத்தில் இருந்த ஆசிடை எடுத்துக் குடித்தார். இதில் தொண்டை, குடல் ஆகியவை வெந்து வலியால் துடித்த அவர் மயக்கமடைந்தார். இதனால் பள்ளி ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
உடனடியாக மற்ற ஆசிரியர்கள் அவரை மீட்டு தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையி்ல அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கல்வி அதிகாரி ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் தான் ஆசிரியர் ஜெகதீஸ்வரன் ஆசிட் குடித்ததற்கு காரணம் என்று கூறி அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையி்ட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த மேயர் சைதை துரைசாமி ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று மாலை 6 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை இரவு 10.20 மணி வரை நீடித்தது.
பேச்சுவார்த்தையின் முடிவில் ஆசிரியர்கள் கூறியதாவது,
கல்வி அதிகாரி ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் ஆகியோரை மேயர் சஸ்பெண்ட் செய்துள்ளார். அதனால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றனர்.
இது குறித்து தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.












Click it and Unblock the Notifications