திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான்-'பட்டம்' சூட்டினார் திருமாவளவன்!

யார் அடுத்த தலைவர் என்பதில் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மறைமுக மற்றும் நேரடி யுத்தம் நடந்து வருகிறது. இவர்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் கட்சியின் மூத்த தலைவர்கள் அணி திரண்டு பிரிந்து நிற்கின்றனர். இந்த மோதலை மற்ற கட்சியினர் அனைவரும் மெளனமாக பார்த்துக் கொண்டுள்ள நிலையில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான் என்று அதிரடியாக கூறியுள்ளார் திருமாவளவன்.
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தண்டையார் பேட்டையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசுகையில்,
மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. மு.க.ஸ்டாலினை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நலமோடும் வளமோடும் வாழ வேண்டும். இளைஞர்கள் எழுச்சி பெற்றால் தமிழகம் முன்னேறும் என்பதில் ஐய்யபாடு இல்லை.
பொது வாழ்க்கையில் ஈடுபடும் தலைவர்களுக்கு இந்த மாதிரி பிறந்த நாள் விழா கொண்டாடுவது அவர்களுக்கு ஊக்கம் தரும். பிறருக்கு வாழ்பவர்கள் தங்களுக்கு என்று நேரம் ஒதுக்க முடியாது. அரசியல் உறவு என்பது வேறு தனி நபர் உறவு என்பது வேறு. நான் எந்த அணியில் இருந்தாலும் இவ்விழாவுக்கு வருவேன்.
பண்பை வளர்க்கக்கூடிய தலைவர்களுள் முதன்மையானவர் கருணாநிதி. தனக்கு வேண்டாதவர்களையும், தன்னை தூற்றுபவர்களையும் மதிக்க தெரிந்தவர். இளையவர்களாக இருந்தாலும் கூட அவர்களை தம்பி, நண்பர் என கூறி பெருந்தன்மையோடு பழகுவார். மாற்று கட்சி தலைவர்களையும் நன்கு மதிப்பார். இத்தகைய தலைமைபண்பு ஸ்டாலினிடம் உள்ளது.
ஒரு தலைவன் பின்னால் இன்னொரு தலைவன் உருவாவது கஷ்டம். ஆனால் ஸ்டாலின் தொண்டர்களை சந்திப்பது மக்களை நேசிப்பது, அவதூறை சமாளிப்பது ஓய்வில்லாமல் உழைப்பது என தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கிறார். சுருக்கமாக சொன்னால் கருணாநிதியின் தொடர்ச்சி ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் கருணாநிதிக்கு பிறகு சிறந்த தலைவர் ஸ்டாலின் தான். இளைய சமுதாயமும், புதிய தலைமுறையும் கலைஞருக்கு பின் ஸ்டாலினிடம் அதிகம் எதிர்பார்க்கிறது. இளைஞர்கள் கொள்கை பற்றோடு இருக்க வேண்டும். அதனை கைவிட்டால் தேசம் அனாதையாகி விடும்.
திரைப்படம் மனிதனை ஆட்டி படைக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சினை, நதிநீர் பிரச்சினை பற்றி நடிகர்களால் பேச முடியுமா? அவர்களால் ஆடவும், ரசிகர்களால் விசில் அடிக்கவும்தான் தெரியும் என்றார் திருமாவளவன்.
தம்பி பிறந்த நாளுக்கு வராத அண்ணன் அழகிரி:
இதற்கிடையே தனது தம்பி ஸ்டாலினின் 60வது பிறந்த நாளன்று அவரை வாழ்த்த வரவில்லை அண்ணன் மு.க.ஸ்டாலின்.
நேற்று காலை 7 மணிக்கு, ஸ்டாலின் தனது வீட்டில் மனைவி, மகன், மகள், சகோதரி செல்வி உள்ளிட்டோர் முன்னிலையில், "கேக்' வெட்டினார். தொடர்ந்து, கோபாலபுரம் சென்று, தந்தை கருணாநிதி மற்றும் தாய் தயாளுவிடம் ஆசி பெற்றார்.
பின்னர் ராயப்பேட்டையில், தென் சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒன்றில் ஸ்டாலினும், மற்றொன்றில் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
மத்திய அமைச்சர்கள், மாநில முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் திரண்டு,ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர். இளைஞர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வெள்ளை சட்டையும், கறுப்பு நிற பேன்ட்டும் அணிந்திருந்தனர். பகல் ஒரு மணி வரை நிகழ்ச்சி நடந்தது. மாஜி அமைச்சர்கள் பொன்முடியும், வேலுவும் கடைசி வரை ஸ்டாலின் கூடவே இருந்தனர். நிறைய பேர் மாலையும், "பொக்கே'வும் கொடுத்தனர். சிலர் பணமாலையும் அணிவித்தனர்.
இளைய சகோதரியும் எம்.பி.,யுமான கனிமொழி கூட,வீட்டுக்குச் செல்லாமல், விழா பந்தலுக்கு வந்து தான் வாழ்த்துக் கூறினார். அதேசமயம் மூத்த சகோதரரும் மத்திய அமைச்சருமான அழகிரி வரவில்லை. போனில் வாழ்த்துச் சொன்னதாகவும் தகவல் இல்லை. அவர் தற்போது சங்கரன்கோவிலில் முகாமிட்டுள்ளார்.
சமீபத்தில் அங்கு நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் இருவரும் பேசுகையில் மாறி மாறி அன்பைப் பொழிந்தனர். அன்புத் தம்பி என்று அழகிரி அழைக்க, அன்பு அண்ணன் என்று ஸ்டாலின் சொல்ல, திரண்டு வந்திருந்த திமுகவினர், அப்பாடா, எல்லாம் சரியாயிருப்பா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஒருவேளை அந்த நிகழ்ச்சியிலேயே ஸ்டாலினுக்கு அழகிரி பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லி விட்டாரோ என்னவோ...!












Click it and Unblock the Notifications