கொஞ்ச நாளைக்கு 'புலிகளைப்' பார்க்க முடியாது!
முதுமலை : நீலகிரி மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் மார்ச் 5 ம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகத்தை காலவரையின்றி மூட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு விலை உயர்ந்த மரங்களும், மூலிகைத் தாவரங்கள் காணப்படுகின்றன. இந்த வனப்பகுதியில் யானைகள், புலிகள், மான்கள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன.
விலங்குகள் இடம் பெயர்வு
கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே நீலகிரி மலைப்பகுதியில் வறட்சி அதிகரித்துள்ளது. நீர்நிலைகளும் வறண்டு விட்டதால் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் முதுமலை வனப்பகுதிகளில் உள்ள மான்கள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பசுந்தீவனங்களையும், தண்ணீரையும் இடம்பெயரத்தொடங்கியுள்ளன.பசுந்தீவனங்கள் கிடைக்காமல் வளர்ப்பு யானைகளும் சிரமம் அடைந்துள்ளன.
இதனால் காய்ந்த சுள்ளிகள் மற்றும் விறகுகளை வனத்தில் சேகரித்து யானைகள் மூலம் கொண்டுவந்து தீ மூட்டி உணவு சமைத்து அவற்றுக்கு பாகன்கள் கொடுத்து பசியாற்றி வருகிறார்கள்.
மார்ச் 5 முதல் முட முடிவு
வறட்சி காரணமாக தீ விபத்து ஏற்படுவதை தடுக்க சென்னை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் உத்தரவின் பேரில் முதுமலை புலிகள் காப்பகம் நாளை மறுநாள் (5 ந் தேதி) முதல் காலவரையின்றி மூடப்படுகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வருகிற 5 ந் தேதி முதல் முதுமலையில் வனத்துறை சார்பில் நடைபெற்று வரும் யானை சவாரி, வாகன சவாரிகள் ரத்து செய்யப்படும். மேலும் வனத்துறை சார்பில் முதுமலை பகுதியில் இயங்கும் தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்படும். சுற்றுலா பயணிகள் முதுமலை வனப்பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்படும். முதுமலை வனப்பகுதியில் மழை பெய்து மீண்டும் பசுமை திரும்பிய பிறகே திறக்கப்படும். என்று முதுமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் அமீர்காஜா தெரிவித்துள்ளார்.
முதுமலை காப்பகம் ஆண்டுதோறும் வறட்சி ஏற்படும்போது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மூடப்படும். ஆனால் இந்த ஆண்டு தற்போதே கடும் வறட்சி நிலவுவதால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே மூடப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.












Click it and Unblock the Notifications