காதலிக்க மறுத்ததால் வெறிச்செயல்- மாணவியை கொன்ற கும்பல் கைது!
சீர்காழி: காதலிக்க மறுத்ததால் சீர்காழி மாணவி ராதிகாவை தூக்கில் தொங்கவிட்ட இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி திட்டை சாலையில் உள்ள நங்கநள தெருவை சேர்ந்தவர் ராஜீ. இவரது மகள் ராதிகா(வயது12). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை ராதிகா வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அதன் பின்னர் பள்ளி முடிந்து மாலை 5.30 மணி வரை வீடுதிரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் அமுதா மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. இந்நிலையில் வீட்டின் பின் பக்கத்தில் உள்ள நார்த்தங்காய் மரக்கொல்லையில், சுடிதார் துப்பட்டாவால் தூக்கில் மாணவி ராதிகா பிணமாக தொங்கினார். இதை கண்ட சிலர் ராதிகாவின் தாய்க்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் அலறி அடித்து ஓடி சென்று பிணமாக தொங்கிய மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாணவி ராதிகா உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஒருதலைக்காதலால் கொலை
காவல்துறையின் விசாரணையில் ராதிகாவை அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது.
சீர்காழி நேரு காலனியை சேர்ந்தவர் அஜீத்குமார்(17). கட்டிட தொழிலாளியான இவர் ராதிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு சாப்பிடுவதற்காக மாணவி ராதிகா வந்துள்ளார்.
இதை நோட்டமிட்டு அஜீத்குமாரும், அவரது நண்பர் சென்னையை சேர்ந்த விஜயும், பின் தொடர்ந்து சென்றுள்ளனர். வீட்டின் பின்புறம் உள்ள நார்த்தங்காய் மரகொல்லைக்கு காய்களை பறிக்க ராதிகா சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அஜீத்குமார், ராதிகாவை பார்த்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.இதற்கு ராதிகா மறுப்பு தெரிவித்து அஜித்குமாரை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் உடனே ராதிகா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கினார். பின்னர் ராதிகாவை, விஜய் பிடித்து கொள்ள அஜித்குமார் துப்பட்டாவால் மரத்தில் கட்டி ராதிகாவை தூக்கில் தொங்க விட்டார். இதில் சிறிது நேரத்தில் ராதிகா துடிதுடித்து இறந்துள்ளார்.
இக்கொலை தொடர்பாக அஜித்குமார் மற்றும் விஜயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications