விசைப்படகு மீது மோதிய சிங்கப்பூர் கப்பல் சிக்கியது: கொச்சி வந்து கொண்டிருக்கிறது!
திருவனந்தபுரம்: ஆலப்புழா அருகே மீன்பிடி படகு மீது மோதிவிட்டு தப்பிச் சென்றது சிங்கப்பூர் சரக்கு கப்பல் என்று தெரிய வந்துள்ளது. கோவா-சிங்கப்பூர் பாதையில் சென்று கொண்டிருந்த அந்த கப்பலை உடனடியாக கொச்சி திரும்ப இந்திய கடற்படை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரை கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற டான் என்ற படகு மீது ஆழப்புழா அருகே நேற்று முன்தினம் அதிகாலை அடையாளம் தெரியாத கப்பல் மோதியதில் கொல்லத்தைச் சேர்ந்த ஜஸ்டின் மற்றும் சேவியர் ஆகிய 2 மீனவர்கள் பலியாகினர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 3 மீனவர்களை காணவில்லை.
இந்த சம்பவம் நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் கப்பலை மீனவர்களால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை. மேலும் மீனவர்கள் படகு மீது மோதிய கப்பலை தேடும் பணி தாமதமாகத் தான் தொடங்கியது. இதனால் கப்பலை உடனடியாக பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த அன்று அந்த வழியாக 13 கப்பல்கள் சென்றது தெரிய வந்தது. தீவிர விசாரணைக்கு பின் சிங்கப்பூர் கப்பல் ஒன்றை கடற்படையினர் கோவா-சிங்கப்பூர் நீர்வழி சாலையில் வைத்து மடக்கினர். முதல்கட்ட விசாரணையில் மீனவர்கள் படகு மீது மோதியது அந்த கப்பல் தான் என்று தெரிய வந்தது. தொடர் விசாரணைக்காக அந்த கப்பல் கொச்சி துறைமுகத்திற்கு திருப்புமாறு கடற்படை வீரர்கள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து அந்த கப்பல் விசாரணைக்காக கொச்சி வந்து கொண்டிருக்கிறது. கொச்சியில் 2ம் கட்ட விசாரணை நடக்கிறது. இதற்கிடையே காணாமல் போன 3 மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications