இலங்கை போர்க்குற்றத்துக்கு துணை போகிறதா இந்தியா?: சீமான் கேள்வி

பேரணி
தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க, இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் இருந்து பேரணி தொடங்கியது.
பேரணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். பேரணியை திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் இருந்து தொடங்கி, காந்தி இர்வின் பாலத்தில் முடிவடைந்தது.
ஆயிரக்கணக்கான பேர் இலங்கை அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி வந்தனர். பேரணி முடிந்ததும் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தை விளக்கி சீமான் பேசினார்.
நிலைப்பாடு என்ன?
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். எத்தனையோ நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரிக்கும்போது இந்தியாவும் ஆதரிக்க வேண்டும். இந்தியாவின் தூதுவர் பேசியபோது, எந்த நாட்டுக்கு எதிரான தீர்மானத்திற்கும் நாங்கள் ஆதரவாக இருக்க முடியாது என்று சொல்லியிருக்கிற கருத்து, மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அந்த கருத்து கண்டனத்திற்குரியது.
இதேபோல இலங்கையின் மனித உரிமை தூதுவர், 100 விழுக்காடு இந்தியா எங்களை ஆதரிக்கிறது என்று கூறுகிறார். அப்படி என்றால் இலங்கை செய்த அந்த போர்க்குற்றத்தை மறைக்க இந்தியா துணை நிற்கிறதா? இந்தியாவின் அனுமதி இல்லாமல் எப்படி ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தில் அவர் இவ்வாறு சொல்லமுடியும்? இந்த நிலைப்பாடு தவறானது.
இந்திய அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்துத்தான், எங்களின் அடுத்தகட்ட போராட்டம் இருக்கும். இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காவிட்டால், காலம், காலமாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications