மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம்: அன்புமணி மீது சிபிஐ வழக்கு

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளது இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி. அந்த கல்லூரியில் போதிய வசதிகள் இல்லையென்று கூறி அதற்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடந்த 2008ம் ஆண்டு அந்த கல்லூரிக்கு அனுமதி வழங்கினார் என்று புகார் எழுந்தது.
இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கடந்த 2008ம் ஆண்டு அந்த கல்லூரியில் ஆய்வு செய்து அங்கு கல்வி கற்றுக் கொடுக்க 30 சதவீத வசதிகள் மட்டுமே உள்ளது என்பதை கண்டறிந்தனர். அந்த கல்லூரியில் மருத்துவமனையில் 40 டாக்டர்கள் பணியாற்றுவது போன்று போலி கையெழுத்து போடப்பட்டதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வசதிகள் இல்லாத அந்த கல்லூரியில் மாணவர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்தது. அதன் பிறகு மத்திய சுகாதாரத் துறை டாக்டர்கள் 2 பேர் அந்த கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு அது தொடர்ந்து செயல்படலாம் என்று தெரிவித்தனர். அந்த கல்லூரிக்கு அனுமதி வழங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் 2 பேரும் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸுக்கு பரிந்துரை செய்தனர். அவரும் அனுமதி வழங்கினார். ஆனால் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்ற்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து 2 டாக்டர்கள், 2 மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து 2 டாக்டர்கள், 2 மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications