வங்கி கொள்ளையர்கள் 5 பேரை என்கௌன்டரில் சுடவில்லை: ஐகோர்ட்டில் கமிஷனர் பதில் மனு

சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது போலீஸ் கமிஷனர் திரிபாதி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
வங்கி கொள்ளையர்களை சுட்டுக் கொன்ற போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனுதாரர் புகழேந்தி கூறுவது சட்டப்படி சரியானதல்ல. இச்சம்பவம் குறித்து தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வந்த தகவல்களின் அடிப்படையில் மனுதாரர் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இச்சம்பவம் என்கௌன்டர் சம்பவம் அல்ல. சென்னையில் பட்டப்பகலில் 2 வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர்களையும், பொதுமக்களையும் மிரட்டியது அனைவரும் தெரிந்த ஒன்றே.
அப்படிப்பட்ட நபர்கள் வேளச்சேரியில் உள்ள வீட்டில் தங்கி இருந்த விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரித்தனர்.
கொள்ளையர்களை விசாரிக்க சென்ற போலீசாரை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் அவர்களிடம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பேசியபடி கதவைத் திறக்க முயற்சித்தனர். ஆனால் அதையும் மீறி கொள்ளையர்கள் போலீசாரை நோக்கி சுட்டனர்.
இதனால் வேறு வழியில்லாமல் போலீசார் திருப்பிச் சுட்டனர். பொதுமக்களை காக்கவும், தங்களைத்தானே தற்காத்துக் கொள்ளவும் திருப்பிச் சுட்டதில் 5 கொள்ளையர்களும் பலியானார்கள்.
அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனான வினோத்குமாரை வங்கி ஊழியர்கள் இருவர் அடையாளத்தை உறுதி செய்தனர். அனைவரது கையில் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. பத்திரிகைகளில் அவர்கள் பொம்மை துப்பாக்கி வைத்திருந்ததாக வந்த தகவல் தவறானது. பலியான 5 பேரும் கொள்ளையர்கள் தான். அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டைகள் போலியானவை.
மனுதாரர் புகழேந்தி மக்கள் நலனுக்காக இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை. விளம்பரத்திற்காக அம்மனுவை தாக்கல் செய்துள்ளார். கொள்ளையர்களிடம் இருந்து 5 பிஸ்டல் துப்பாக்கி, 1 ரிவால்வர் துப்பாக்கி, சிறியரக துப்பாக்கி, ரூ.13 லட்சம் பணம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டு விதிகள் பின்பற்றப்பட்டுள்ளன. மனித உரிமை ஆணையத்திற்கும் முதல்கட்ட விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மனுதாரர் புகழேந்தியின் கோரிக்கை மனுவும் சி.பி. சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.க்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே மனுதாரர் புகழேந்தி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆதரவு தெரிவி்தது சதீஷ் குமார் மற்றும் சதாசிவம் ஆகிய 2 பேர் தங்களையும் இந்த வழக்கில் சேர்கக்கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரம் குறித்த மனித உரிமை ஆணைய விசாரணை, சி.பி.சி.ஐ.டி. விசாரணை நிலுவையில் உள்ளபோது வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கில் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற பிற போலீஸ் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று விசாரணை 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications