''பிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் கருணாநிதி''!

இது தொடர்பாக பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
துரோகிகள்
தற்கால அரசியலுக்கு ஒவ்வாத நிலைப்பாடாக, 1912ம் ஆண்டு திராவிட இயக்கக் கூட்டத்தில், டாக்டர் நடேசன் மற்றும் டி.எம்.நாயர் கூறிய கருத்துக்கு, மெருகு பூசி சினிமா பாணியில் புதிதாகக் கதை அளக்கிறார் தி.மு.க., தலைவர் கருணாநிதி.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 1912ல் நடைபெற்றது பிரிட்டிஷ் அரசாங்கம் - தமிழ்நாடு என்று அப்போது இல்லாமல், சென்னை மாகாணம் ராஜதானி என்று அழைக்கப்பட்டு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பிரிக்கப்படாமல் இருந்தது. அப்போது திராவிட இயக்கத்தின் தலைவர்கள் என்று கூறப்பட்ட டி.எம்.நாயர் (மலையாளம் பேசுபவர்) சர்.பி.டி.தியாகராஜன் (தெலுங்கு பேசுபவர்) டாக்டர் நடேசன் போன்றவர்கள் நீதிக் கட்சியின் சார்பில் வெள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்; நமது சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள். சுதந்திர நாளை, துக்க நாளாகக் கொண்டாடியவர்கள்.
கலாமும் பிராமண ஆசிரியரும்
கடந்த, 1960 வரை பல ஆயிரக்கணக்கான பிராமண தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பாக பணியாற்றியதை யாரும் மறந்திருக்கமுடியாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தான் ராமேஸ்வரத்தில் படித்தபோது, உதவி செய்த ஆசிரியரான சுப்பிரமணிய அய்யரை தன் பதவியேற்புக்கு டில்லிக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்தார் .
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய நிலைமைக்கு ஒவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை, தனக்கு சிக்கல், தோல்வி வரும்போதெல்லாம் ஒரு ஆயுதமாக எடுப்பதில் கருணாநிதி வல்லவர்.
கருணாநிதி குடும்பமும் பிராமணர்களும்
பிராமணர்களின் அறிவுரைப்படி, ஆலோசனை உதவியுடன் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் வளர்த்தவர் தான் இந்த தலைவர்.
தயாளுவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான். பல ஆண்டுகளாக இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.
திமுக ஆட்சிகளில் பிராமணர்கள்
கடந்த, 1996ல், 2006ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ்., 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்., உள்துறைச் செயலராக (ஹோம் செகரட்டரி) மாலதி ஐ.ஏ.எஸ்., மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட கவிஞர் வாலி, குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ்
சீனிவாசன், தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி என்று இவரது தேவைகளுக்கான பிராமணர் பட்டியல் தொடரும். தனக்குத் தேவை என்றால் இவர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லாதவர்கள்.
பித்தலாட்ட குடும்பம்
தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்கலாம்; மற்றவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும். தமிழ் சுதந்திரப் போராட்ட தியாகி கோட்டாவில் தனது பேரன் (மு.க.அழகிரி மகன்) அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ., படிக்கலாம். தன் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, சூர்யா, ஆதித்யா போன்ற சம்ஸ்கிருத பெயர்கள். தனது 'டிவி'க்களுக்கு சூரியா, ஆதித்யா, தேஜா, உதயா, ஜெமினி, சன் நெட்வொர்க் என்று வேற்று மொழிப் பெயர்கள். எத்தனை வருடங்களுக்குத்தான் இந்தப் பெரிய பித்தலாட்டம், ஏமாற்று வேலை?
எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து, இந்தியாவிலேயே ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்று பெயர் பெறவில்லை!
கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் பெரிய முதலாளிகள். இதெல்லாம் எப்படி வந்தது? கருணாநியின் மகள் டில்லி திகார் சிறையில் எட்டு மாதம் கம்பி எண்ணியது எதற்காக?
தனது குடும்பத்தில் நடக்கும் வாரிசு பிரச்னையை, கட்சியின் தோல்வியை திசை திருப்பவே, இந்த பிராமணர் எதிர்ப்பு நாடகம். ஆனால், நமது அரசியல் சாசனப்படி எந்த ஜாதியையும், பழித்துச் சொல்ல, இழிவுபடுத்த சட்டத்தில் இடமில்லை.
வன்முறையை தூண்டுகிறார்
எல்லா மக்களுடன் அமைதியாக, நட்பாக வாழும் பிராணமர்கள் மீது வன்முறையை தூண்டும்படி, அச்சுறுத்தும் படியாக பேசும், தி.மு.க., தலைவர்கள் கருணாநிதி மீதும், அன்பழகன் மீதும் மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications