மேலும் 2 கொள்ளையர்களின் உடல்களை அடையாளம் காட்டி எடுத்து் சென்ற உறவினர்கள்
சென்னை: சென்னை வேளச்சேரியில் சுட்டுக் கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையர்களில் மேலும் 2 பேரின் உடல்கள் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இன்னமும் 2பேர் உடல்கள் அடையாளம் காட்டப்படவில்லை.
வேளச்சேரி சம்பவம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கிக் கொள்ளையில் தொடர்புள்ள வடமாநிலத்தைச் சேர்ந்த 5 கொள்ளையர்களை போலீசார் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டன.
வினோத் குமார் என்கிற சுஜாய் குமார் ரே என்ற கொள்ளையனின் உடலை அவனது தந்தை அடையாளம் காட்டினார். பின்னர் அவனது உடல் விமானத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள அவனது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராஜீவ்குமார், வினய்பிரசாத் ஆகிய மேலும் 2 கொள்ளையர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் நேற்று அடையாளம் காட்டினார்கள். மாஜிஸ்திரேட் முன்னிலையில் அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் அடையாளம் காட்டப்பட்டது.
ராஜீவ்குமாரின் மாமா ஜித்தேந்தர், வினய்பிரசாத்தின் தாத்தா துர்கா பிரசாத் ஆகியோர் வந்திருந்து அடையாளம் காட்டினார்கள். அவர்களது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார். பின்னர் அவர்களது உடல்கள் ரெயில் மூலம் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும் 2 பேர்களின் உடல்கள் அடையாளம் காட்டப்படாமல் அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications