பாரிமுனை எல்.ஐ.சி. அலுவலகத்தில் பயங்கர தீ: கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள் நாசம்
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் இன்று காலை 7.30 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கம்ப்யூட்டர்கள், அலுவலகப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
சென்னை பாரிமுனையில் பாம்பே மியூச்சுவல் பில்டிங் என்ற 7 மாடி கட்டிடம் உள்ளது. இதில் தரை மற்றும் முதல் தளத்தில் வங்கிகள் செயல்படுகின்றன. 3வது மாடியில் எல்.ஐ.சி. அலுவலகம் உள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு அலுவலகத்தை சுத்தம் செய்ய ஆட்கள் வந்தனர். அப்போது ஒரு அறையில் இருந்து புகை வருவதைப் பார்த்த அவர்கள் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்த உடனேயே திருவல்லிக்கேணி, எஸ்பிளனேடு, ராயபுரம் பகுதியில் இருந்து 8 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. ஆனால் அதற்குள் தீ மள, மளவென எரியத் துவங்கியது. தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் கட்டிடத்திற்குள் நுழைய தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர். பின்னர் ராட்சத ஏணியில் ஏறி 3வது மாடி ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், அலுவலகப் பொருட்கள், சேர், மேஜைகள், ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
3வது மாடியிலேயே பண வசூல் மையம் மற்றும் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு அறை உள்ளன. ஆனால் அவைக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications