2013ல் சந்திரனுக்கு 3வது ஆய்வு ராக்கெட்டை அனுப்ப சீனா திட்டம்
பெய்ஜிங்: சந்திரன் குறித்து மேலும் ஆராய்ச்சி செய்ய அடுத்த ஆண்டு தனது 3வது ராக்கெட்டை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
சந்திரனில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்யும் வகையில் கடந்த 1970ம் ஆண்டு ரஷ்யா ராக்கெட் ஒன்றை அனுப்பியது. ஆனால் அது விண்ணில் 10 கி.மீ. கடந்த பிறகு கட்டுபாட்டை இழந்தது. அதற்கு அடுத்த ஆண்டு (1971) அமெரிக்கா ஒரு ராக்கெட்டை சந்திரனுக்கு அனுப்பி ஆராய்ச்சியில் ஈடுபட்டது.
இந்த நிலையில் சந்திரனில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சியில் சீனாவும் இறங்கியுள்ளது. இதற்காக சேஞ்ச்- 1 மற்றும் 2 ஆகிய 2 ராக்கெட்களை சந்திரனுக்கு அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு (2013) சேஞ்ச் -3 என்ற ராக்கெட்டை சந்திரனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இது குறித்து சேஞ்ச் ராக்கெட்களின் மூத்த வடிவமைப்பாளர் ஈ பெய்ஜியன் கூறியதாவது,
சந்திரனின் ஆய்விற்கு இந்த முறை பல நவீன தொழிற்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. பூமியில் இருந்து தெரியாத விண்வெளி பகுதிகளை சந்திரனில் இருந்து ஆராய்ச்சி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேஞ்ச்- 3ன் வடிவம் அதற்கு முன்பு அனுப்பப்பட்ட 2 ராக்கெட்களை விட வித்தியாசமாக இருக்கும். இந்த ராக்கெட்டில் தரையிறங்க வசிதயாக கால்கள் போன்ற வடிவங்கள் உள்ளன.
மொத்தம் 100 கிலோ எடை கொண்ட ரோவர் கருவி ராக்கெட் மூலம் சந்திரனில் இறக்கப்படும். இந்த கருவி சுமார் 3 மாதங்களுக்கு சந்திரனில் சுற்றித் திரிந்து ஆய்வு மேற்கொள்ளும். இதனை பூமியில் இருந்தவாறே இயக்க முடியும்.
ஆய்வின்போது சந்திரனில் உள்ள பெரிய குழிகளில் ரோவர் கருவி விழாமல் இருக்க வேண்டும். அதேபோல குன்றுகள், பாறைப் பகுதிகளை கடக்கும் போதும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ரோவர் கருவியில் பொறுத்தப்பட்டுள்ள சோலார் தட்டுகள் மூலம் காலை நேரங்களில் சூரிய கதிர்களில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். இதன் மூலம் இரவில் நிலவும் கடும் குளிரில்(- 170 டிகிரி) இருந்து ரோவர் கருவி தன்னையே பாதுகாத்து கொள்ளும் என்றார்.












Click it and Unblock the Notifications