தொடங்கியது பிளஸ்டூ தேர்வு... 8.22 லட்சம் பேர் எழுதுகிறார்கள்-காப்பியடிப்பதைத் தடுக்க நடவடிக்கை

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 1,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மாநகரில் மட்டும் 139 தேர்வு மையங்களில் 50,201 மாணவ-மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் 31 மையங்களில் 105 பள்ளிகளைச் சேர்நத் 12,042 மாணவ-மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இது தவிர 61,319 பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர்.
வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வில் மாணவர்களை காப்பியடிப்பதை தடுக்க கண்காணிப்பு குழுக்களும், பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பிரச்சனைக்குரிய மையங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு தேர்வு துவங்கி முடியும் வரை கண்காணிப்பு குழுவினர் அங்கேயே இருந்து தேர்வுப்பணிகளை மேற்பார்வையிடுவார்கள்.
தேர்வு அறைக்குள் மாணவர்கள் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காப்பியடித்து சிக்கும் மாணவ-மாணவியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்வின்போது ஒழுங்கீனச் செயல்களி்ல் ஈடுபட்டு சிக்கி 184 பேர் தண்டனை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒழுங்கீனச் செயல்கள்களை பள்ளி நிர்வாகம் ஊக்குவித்தாலோ, உடந்தையாக இருந்தாலோ தேர்வு மையத்தினை ரத்து செய்யவும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பள்ளி கல்வி இயக்குனருக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில் பெயர் பட்டியலிலும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலும் தேர்வர்களுடைய புகைப்படங்கள் பதியப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி முதல்கட்டமாக 1,937 தேர்வு மையங்களில் ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனால் மின்தடை ஏற்படும்போது ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படும். மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதலாம். பொதுத் தேர்வு வரும் 30ம் தேதி முடிகிறது.












Click it and Unblock the Notifications