நீதிக் கட்சியின் நூற்றாண்டில் மகளிர் தினம் கொண்டாடுவது சிறப்பானது, பெருமையானது- கருணாநிதி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மனிதப் பிறவியில் ஏறத்தாழ சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் சமூக, அரசியல், பொருளாதார விடுதலை பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அனைத்து நாடுகளிலும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள்.
நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர்க்குத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையையும், வேட்பாளராகப் போட்டியிடும் உரிமையையும் பெற்றுத் தந்த நீதிக் கட்சி தொடங்கப்பட்ட நூறாம் ஆண்டு நடைபெறும் வேளையில் இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழா கொண்டாடப்படுவது மகளிர் ஒவ்வொருவரும் எண்ணி எண்ணிப் பெருமைப்படத்தக்க இனிய நிகழ்வாகும்.
1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மகளிர் திட்டத்தின் மூலம் 2006-2011 ஆகிய ஆண்டுகளில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 682 மகளிரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 493 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு; அவற்றின்மூலம் 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கி கிராமப்புற மகளிர் பொருளாதார முன்னேற்றம் காண வழிவகுக்கப்பட்டது.
2006-2011 ஐந்தாண்டுகளில் 4 லட்சத்து 95 ஆயிரத்து 634 ஏழை மகளிர் திருமணங்களுக்கு 937 கோடியே 50 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் வழங்கி மகளிர் நலம் காத்துள்ளது. ஏழை மகளிர் பட்டப்படிப்பு வரை படிக்க வேண்டுமெனக் கருதி 1989-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம் 2007-ல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டிக்கப்பட்டு இன்றும் பல்லாயிரக்கணக்கான மகளிர் பயனடைகின்றனர்.
இவை மட்டுமல்லாமல், 1990- ல் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிர்க்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்; அதே ஆண்டில் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குச் சமஉரிமை அளித்திடும் தனிச் சட்டம்; 1996-ல் உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்; 2006-ல் அமைந்த கழக அரசு ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம்;
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித்திட்டத்தின்கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம்; அரவாணிகள் நல வாரியம்; 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்க்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் என்பன உட்படப் பல்வேறு திட்டங்களைப் புதிதுபுதிதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தி பெண்கள் சமுதாயம் தொடர்ந்து முன்னேற வழி வகை செய்தது.
ஆனால், பொதுமக்கள் நலம் நாடாத இன்றைய அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் வரலாறு காணாத வகையில் தினமும் 15 மணி நேர மின்சாரத் தடைகள், மிகவும் கடுமையான விலைவாசி உயர்வுகள் போன்றவைகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மகளிர், இக்கொடுமைகள் எல்லாம் விரைவில் அகலும்; மீண்டும் நல்வாழ்வும், நலத் திட்டங்களும் கிடைக்கும்; நமது வீடும், வீட்டில் வளரும் இளம் செல்வங்களின் எதிர்கால வாழ்வும் மலரும் எனும் நம்பிக்கையோடு இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழாவைக் கொண்டாடிட தமிழக மகளிர்க்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக என்று கூறியுள்ளார் கருணாநிதி.
டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் வாழ்த்து
இதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
பெரும்பாலான பெண்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் விடுதலை கிடைக்கவில்லை, பெண்களுக்கு பொருளாதார விடுதலை கிடைக்க அரசு வேலைவாய்ப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிய நம்மால், அரசியல் விடுதலை கிடைப்பதற்காக நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு ஒதுக்கீட்டை இன்று வரை வழங்க முடியவில்லை. இதற்கான சட்டமுன்வடிவு கடந்த 2010-ஆம் ஆண்டே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில் மக்களவையில் இன்னும் முட்டுக்கட்டை நீடிக்கிறது.
அந்த முட்டுக்கட்டை நிலையைப் போக்க உள்ஒதுக்கீட்டுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வந்து மகளிருக்கு அரசியல் அதிகாரம் வழங்க முன்வருவோம். அனைத்து துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய மது இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், பெண்களுக்கு கட்டாய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உறுதி வழங்கவும் பாடுபடுவதற்கு இந்த நன்நாளில் நாம் அனைவரும் சூளுரை ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
சமுதாயத்தில் பாதிப் பேரைக் கொண்ட பெண்களுக்கு கல்வியும், வேலை வாய்ப்பும் தந்து அவர்களையும் சம பங்குதாரர்களாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும், சொத்தில் அவர்களுக்கு சமபங்குக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதும் தே.மு.தி.க.வின் குறிக்கோளாகும்.
கால தாமதம் இல்லாமல் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளாவட்டத்தில் குறைந்து வருவது கவலைக்குரியதாகும். பெண் கரு கலைப்பில் இருந்து பெண் சிசுக் கொலை வரை ஆரம்பத்திலேயே பெண் குழந்தைகள் பிறப்பதை தடுத்து வருகின்றனர்.
வறுமை இதற்கு ஒரு காரணம் என்றாலும் நம்முடைய சமுதாய அமைப்பும் மற்றொரு காரணமாகும். பெண் குழந்தைகளை பெற்று ஆளாக்குவதை ஒரு சுமையாக பெற்றோர்கள் கருதுகிறார்கள். இந்நிலையை மாற்றி பெண் குழந்தைகளை தாயுள்ளத்தோடு வளர்ப்பதற்கு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டியது ஒரு முற்போக்கு அரசின் கடமையாகும்.
ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்ற சமவாய்ப்பு சமுதாயம் அமைந்திடவும், பெண்கள் தற்சார்பு பெற்று தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் உலக மகளிர் தினம் உதவட்டும் என்று இந்த நன்னாளில் எனது மகளிர் தின
நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன்
சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தியில்,
பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருவது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. வரதட்சணை, பாலியல் பலாத்காரம், கவுரவக் குற்றங்கள், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல், பள்ளி மாணவிகளுக்குப் பாதுகாப்பின்மை போன்றவை முக்கிய பிரச்சினைகளாக முன்னுக்கு வருகின்றன.
தலித், ஆதிவாசி, சிறுபான்மை பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். பாலினப் பாகுபாடு பல துறைகளில் பல இடங்களில் நிலவுகின்றன. பாலின சமத்துவத்துக்கான போராட்டம் ஒருபுறம் ஜனநாயகத் தேவையாகவும், மறுபுறம் சமூக மாற்றத்துக்கான இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இத்தகைய போராட்டங்கள் பல முனைகளில் துடிப்புடன் எழுவதை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கும், ஊக்குவிக்கும் என்பதுடன், தமிழகத்தில் இவற்றைக் கட்சியின் சார்பில் முன்னெடுத்துச் செல்லவும் உறுதியேற்று உலகப் பெண்கள் தின வாழ்த்துக்களை, உரித்தாக்கிக் கொள்கிறது என்று வாழ்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications