ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகளுக்கு மட்டும் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பாயும் மின்சாரம்!
சென்னை: தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் மின்சாரம் இல்லாமல் தவித்து வரும் நிலையில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சார விடுமுறை அமலாகியுள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் தங்கு தடையின்றி தொடர்ந்து 24 மணி நேரமும் மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது தமிழக மின்சார வாரியம்.
தமிழகம் முழுவதும் பல மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. சென்னையில் குறைந்தது 2 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. பிற பகுதிகளில் குறைந்தது 5 முதல் 8 மணி நேரம் வரையிலும், பெரும்பாலான பகுதிகளில் 12 மணி நேரமும் மின்வெட்டு காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் தொடர்ந்து 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்விநியோகம் நடந்து வருகிறதாம்.
இதுகுறித்து பூந்தமல்லியைச் சேர்ந்த வி.அன்பழகன் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, மின்பகிர்மான வட்ட, செயற் பொறியாளரிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், பல்வேறு தொழில்நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அந்த நிறுவனங்களுக்கு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தையே இருளில் போட்டு விட்டு இப்படி தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது நியாயமா என்று கேட்கிறார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications