கோழிக்கறி இறக்குமதிக்கு தடை விதித்த விவகாரம்: இந்தியா மீது அமெரிக்கா புகார்

கடந்த 2007 மார்ச் மாதம் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான சில நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உயிருள்ள கோழிகள், வாத்து, வான்கோழி மற்றும் இதர சில பறவையின குஞ்சுகளுக்கு இந்தியா தடை விதித்தது. இந்த வகையில் அமெரிக்காவிலிருந்து வரும் பறவைகள் மற்றும் இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டது. அதற்கு பிறகு பலமுறை அமெரிக்கா இந்த தடைக்கு உரிய விளக்கும் அளிக்குமாறு கோரியும் இந்தியா அறிவியல்ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணத்தை கூறவில்லை என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரான் கிர்க் கூறியுள்ளார்.
"நியாயமற்ற விலங்கின சுகாதாரப்பிரச்சினைகளை எழுப்பி அமெரிக்க இறைச்சி பொருள்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இது மறைமுக வர்த்தக கட்டுப்பாடு ஆகும். வேளாண் பாதுகாப்பை பொறுத்தவரை உலகிலேயே அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் உலக வர்த்தக மையம் எமது கோரிக்கை நியாயமானது என்பதை உறுதி செய்யும் என நம்புகிறோம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோழி போன்ற பறவைகளின் இறைச்சி மற்றும் இறைச்சி பொருள்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் 500 கோடி டாலருக்கு இறைச்சி பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் கோழி உள்ளிட்ட பறவையினங்களின் விற்பனை வாயிலான வருவாய் ஆண்டிற்கு 300 கோடி டாலராக (சுமார் ரூ.15,000 கோடி) உள்ளது. எனவே இந்த சந்தையின் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்துள்ளது.
இந்தியாவின் தடையால் அமெரிக்காவின் இறைச்சி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் உலக வர்த்தக மையம் இந்த பிரச்சினையில் அமெரிக்காவிற்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்தால் அமெரிக்க இறைச்சி மீதான தடையை இந்தியா நீக்க வேன் டியிருக்கும். இந்தியா அதற்கு உடன்பட மறுக்கும் பட்சத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்காவிற்கு உலக வர்த்தக மையம் அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications