ஆந்திராவின் முதல் பெண் ரயில் டிரைவர்: மகளிர் தினத்தில் புறநகர் ரயிலை இயக்கினார்!

ஆந்திராவைச் சேர்ந்த சத்யவதி 1999ல் பெங்களூருவில் ரயில்வே பணியில் சேர்ந்தார். அங்கு ரயில் இன்ஜின் உதவி டிரைவராக பணிபுரிந்த அவர் செகந்திராபாத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதன்பின்னர் 2005ம் ஆண்டு சரக்கு ரயில் இன்ஜின் டிரைவராக பதவி உயர்த்தப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக, பயணிகள் ரயில் இன்ஜின் உதவி டிரைவராக, பணியாற்றி வந்த சத்யவதி கடந்த ஜனவரியில், பயணிகள் ரயிலை இயக்குவதற்கான பயிற்சியையும், வெற்றிகரமாக முடித்தார்.
மகளிர் தின சிறப்பு பரிசு
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதன்கிழமையன்று கொண்டாடப்பட்டதை ஒட்டி ஹைதராபாத் புறநகர் பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும், லேடீஸ் ஸ்பெஷல் ரயிலை இயக்குவதற்கான பொறுப்பு, நேற்று சத்தியவதிக்கு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பலாக்னுமா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, லிங்கம்பள்ளி ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் ரயிலை, உதவியாளர் யாருமின்றி தனியாக அவர் இயக்கினார். இதன் மூலம், ஆந்திராவின் ரயில் இன்ஜின் முதல் பெண் டிரைவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
பயணிகள் ரயிலை இயக்கியது குறித்து கருத்து தெரிவித்த சத்யவதி, இது என் வாழ்நாளில் முக்கியமான தருணம் என்று குறிப்பிட்டார். சரக்கு ரயில் இயக்குவதற்கும், பயணிகள் ரயில் இயக்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. நான் எனக்கு அளிக்கப்பட்ட பணியை மிகுந்த பொறுப்புணர்வோடு திறம்பட செய்வேன் என்று கூறினார்.
ரயிலை இயக்குவதற்கு முன்னும், இயக்கி முடித்த பின்னும், அதிகாரிகள், சக ஊழியர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்டோர், சத்யவதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications