ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது: மன்மோகனுக்கு மோடி கடிதம்
அகமதாபாத்: ரயில் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2 வாரங்களில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நரேந்திரமோடி எழுதியுள்ள 4-வது கடிதம் இது.
ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்மோகனுக்கு மோடி எழுதிய கடிதம்:
நாடாளுமன்றம் இன்னும் சில நாட்களில் கூட உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தை தவிர்த்துவிட்டு ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. அப்படி உயர்த்துவது விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை. இதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
5 மாநில தேர்தல் முடிவுக்காக காத்திருந்துவிட்டு அனைத்து மாநில மக்களையும் பாதிக்கும் வகையில் கட்டண உயர்வை அமல்படுத்தக்கூடாது.
உங்களது ஆட்சி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ரயில்வே கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாகிவிடும்.
மேலும் மத்திய அரசின் சரக்குக் கட்டண உயர்வானது குஜராத்தின் மின்துறையை மிகக் கடுமையாக பாதிக்கும்.
கடந்த 2 வாரங்களில் தங்களுக்கு நான் எழுதுகிற நான்காவது கடிதம் இது. மத்திய அரசின் பொதுமக்களைப் பாதிக்கக் கூடிய விஷயங்களுக்காக ஒவ்வொருமுறையும் கடிதம் எழுத வேண்டியிருக்கிறது என்றும் அதில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாத தடுப்பு மைய பிரச்சனை, ரயில்வே பாதுகாப்பு படை விவகாரம், பருத்தி ஏற்றுமதிக்கு தடை உள்ளிட்டவைகளில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மோடி கடிதம் எழுதியிருந்தார்.












Click it and Unblock the Notifications